சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு திட்டவட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவசம்போர்டு வாரியம் உறுதிபட தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பாரம்பரியம், சம்பிரதாயம் ஆகியவற்றை யாரும் மீற அனுமதிக்க முடியாது என்றும் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கோயிலில் பெண்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் 100 பெண்களுடன் நுழையப்போவதாக 'பூமாதா பிரிகேட்' (பூமாதா படை) என்ற அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலின் பாரம்பரியம், சம்பிரதாயம் ஆகியவற்றை யாரும் மீற அனுமதிக்க முடியாது என்றார்.
முன்னதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், "ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எதற்காகவும் கோவில் பழக்க வழக்கங்களையும், நடைமுறையையும் மாற்ற முடியாது.
சபரிமலை கோவிலில், பெண்களை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ளது. அதில் தீர்ப்பு வரும்வரை கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை" எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சரின் கருத்தை முற்றிலும் ஆதரிப்பதாக கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications