காலிக் குடத்துடன் திரண்டு வந்த பெண்கள்... அவர்களைப் பார்க்காமலேயே எஸ்கேப் ஆன நடிகர்!
ஹைதராபாத்: தெலுங்கு நடிகரும், முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனுமான என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவைச் சந்தித்து குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கோரி பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அவர்களைப் பார்க்காமலேயே அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார் பாலா.
பாலகிருஷ்ணா தெலுங்குதேசம் கட்சி சார்பில் இந்துப்புரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். தனது தந்தையின் நினைவு நாளையொட்டி இந்துப்புராவுக்கு அவர் சென்றிருந்தார். அங்கு நினைவு நாளையொட்டி நடந்த சில நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் தனது வீ்ட்டுக்குத் திரும்பினார். அப்போது பெண்கள் கூட்டம் ஒன்று காலிக் குடங்களுடன் அங்கு படையெடுத்து வந்தது.
தங்களது பகுதியில் குடிநீர் வருவதில்லை. குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டு்ம். இதற்காக பாலகிருஷ்ணாவைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். ஆனால் போலீஸார் அவர்களை அனுமதிக்க மறுத்தனர். தடுத்து நிறுத்தினர்.
இதனால் பெண்கள் வீட்டுக்கு முன்பு கூடி போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் பாலகிருஷ்ணாவை வேறு பக்கமாக கூட்டிச் சென்று அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.