மீண்டும் ஜாமீன் கட்ட மறுப்பு- யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் 12 நாள் ஜெயில்!
ஹஜரிபாக்: ஜார்க்கண்ட் மாநில மின்வாரிய அதிகாரியைத் தாக்கிய வழக்கில் மீண்டும் ஜாமீன் தொகை கட்ட மறுத்ததால் பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு மேலும் 12 நாள் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஜரிபாக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி,யானவர் யஷ்வந்த்சின்ஹா. தற்போது நடைபெற்ற தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டு வென்றார்.
அங்கு கடுமையான மின்வெட்டு அமலில் இருந்துள்ளது. இதைக் கண்டித்து கடந்த ஜூன் 3-ந் தேதியன்று பாஜக தொண்டர்களுடன் மின்சார வாரிய அலுவலகம் முன்பு யஷ்வந்த் சின்ஹா போராட்டம் நடத்தினார்.
அப்போராட்டத்தின் போது மின்வாரிய அதிகாரியை பாஜகவினர் கட்டிப் போட்டனர். பின்னர் போலீசார் வந்து அவரை விடுவித்தனர். அதே நேரத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம், தாம்தான் அதிகாரியை கட்டிப் போட்டதாக சின்ஹா கூறினார்.
இதைத் தொடர்ந்து அரசு அதிகாரியை தாக்கியது, பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளில் யஷ்வந்த் சின்ஹா மற்றும் பாஜகவினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது தாம் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்று யஷ்வந்த் சின்ஹா கூறியதால் அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் ஹஜரிபாக் சிறையில் இருந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் உட்கார்ந்திருந்த நாற்காலி உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போதும் தாம் ஜாமீன் தொகை கட்ட முடியாது என்று சின்ஹா கூறிவிட்டார். இதனால் அவரை மேலும் 12 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 28-ந் தேதி நடைபெற உள்ளது.
அத்வானி..
இதனிடையே சிறையில் உள்ள யஷ்வந்த் சின்ஹாவை பாஜக மூத்த தலைவர் அத்வானி நாளை நேரில் சென்று சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் போது ஜாமீன் தொகை கட்டி வெளியே வருமாறு சின்ஹாவை அத்வானி கேட்டுக் கொள்ளக் கூடும் என்று தெரிகிறது.