கேதார்நாத் யாத்திரை 26ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தம்
கேதார்நாத்: உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஜூலை 26ம் தேதி வரை கேதார்நாத் யாத்திரையை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ரிஷிகேஷ்- கேதார்நாத் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் டோலியாதேவி என்ற பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூலை 26ம் தேதி வரை கேதார்நாத் யாத்திரையை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
உத்தரகாண்டில் ஓடும் ஆறுகள் வெள்ள அபாய அளவை தாண்டி ஓடுவதாலும், பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாகவும் அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பத்ரிநாத் யாத்திரை
இதனிடையே மழையினால் கடந்த ஒருவாரகாலமாக தடைபட்டிருந்த பத்ரிநாத் யாத்திரை நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. மோசமான வானிலையால் ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டிருந்த யாத்திரீகள் தங்களின் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
சார்தாம் யாத்திரை
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது.
கடும் மழை வெள்ளம்
கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் உத்தரகண்டில் கடும் மழை காரணமாக அங்கு ஓடும் புனித நதிகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு
பல ஊர்களிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. கங்கோத்ரி, கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாதைகள் சீர்குலைந்து கிடக்கின்றன.
யாத்ரீகர்கள் மீட்பு
யாத்திரிகர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு கேதார்நாத் புனித யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி கடந்த சிலதினங்களுக்கு முன்னர் யாத்திரை புறப்பட்ட 600 பக்தர்களை, ராணுவத் துறை பாதுகாப்பாக மீட்டு தங்கவைத்துள்ளனர்.