யோகி ஆதித்யநாத்.. இவர் பேசாத பேச்சு இல்லை!
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதற்கு பெயர் போனவர்.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில், உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 312 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள், 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
இதையடுத்து மாநிலம் லக்னோவில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதற்கு பெயர் போன யோகி ஆதித்யநாத் பேச்சிலிருந்து சில கருத்துகள்.
காஷ்மீர் இந்தியாவின் அங்கமாகும்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் அங்கமாகும். பாகிஸ்தான் இந்தியாவுடன் மோத நினைத்தால் அதன் இருப்புக்கு அபாயம் ஏற்படும். இந்தியாவிடம் காஷ்மீர் 4 முறை தோல்வியடைந்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியினரே பொறுப்பாவர்.
இந்துத்துவத்தின் அடையாளம் பசு
இந்துத்துவத்தின் அடையாளம் பசு. அத்தகைய பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் யோகா மற்றும் சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். சூரிய கடவுளுக்கு நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் அல்லது தங்கள் வாழ்க்கையை இருட்டு அறையில் வாழ வேண்டும். வாரணாசியில் நடந்த விழாவில் இவ்வாறு கூறியிருந்தார்.
மசூதியில் விநாயகர்
காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவ்ரங்கஜீப் கியான்வாபி மசூதியை கட்டினார். இது எங்காவது நடந்துள்ளதா? இந்து சமாஜ் ஆட்கள் விஸ்வநாதரை தரிசிக்க செல்லும்போது எல்லாம் அந்த கியான்வாபி மசூதி நம்மை எரிச்சல் அடைய வைக்கிறது. அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கௌரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன்.
அயோத்தியில் ராமர் கோயில்
நமது நாட்டில் ராமராஜ்யம் வேண்டும் என்றால், இந்துக்கள் ஒருபோதும் ஜாதி அடிப்படையில் பிளவுபட்டுவிடக் கூடாது. அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவது நிச்சயம்.