புதிய அமைச்சர்களுக்கு மோடி கொடுத்த அரை மணி அட்வைஸ் என்ன தெரியுமா?
டெல்லி: நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என புதிய அமைச்சர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது மத்திய அமைச்சரவையை 2ஆவது முறையாக நேற்று மாற்றியமைத்தார். இதில் எஸ்.எஸ்.அலுவாலியா, எம்.ஜே.அக்பர் உட்பட19 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அத்துடன் சிறப்பாக செயல்படாத ஐந்து அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து, மத்திய அமைச்சரவையை கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர், புதிய அமைச்சர்களுடன் மோடி 30 நிமிடம் வரை கலந்துரையாடினார்.
அப்போது புதிய அமைச்சர்களிடம் மோடி கூறுகையில், மத்திய அமைச்சரவையில் நீங்கள் இடம்பெற்றதை சுதந்திரமாக சில மணி நேரங்கள் கொண்டாடிக் கொள்ளலாம். ஆனால், அதன்பிறகு நீங்கள் உங்களது பணியில் ஈடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் நீங்கள் கடினமாக பணியாற்ற வேண்டும்.
மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களின் பலன்கள் மற்றும் நன்மைகள் அனைத்தும் அடிமட்ட மக்களுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அமைச்சர்கள் செய்துள்ள பணிகள் குறித்து மாதந்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்யவும் உள்ளார்.