வாட்ஸ்-அப் குரூப் வழியாக ஆள் சேர்க்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்! கேரளாவில் திடுக் சம்பவம்
கொச்சி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்து அவர்களை நாட்டுக்கு எதிராக செயல்பட தூண்டுகிறது.
சமீபத்தில் கேரள இளைஞர்கள் இருவர் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக, துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், கேரளாவில் வசிக்கும் வாலிபரை ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தங்கள் வாட்ஸ்-அப் குரூப்பில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய்
துபாயில் பணிபுரிந்த கேரள வாலிபர்கள் இருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நாட்டு உளவுத்துறை, சம்மந்தப்பட்டவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களின் கலந்துரையாடல்களை உளவு பார்த்து இக்குற்றச்சாட்டை சுமத்தியது. இதையடுத்து இருவரையும் துபாய் அரசு நாடு கடத்தியது.
வாட்ஸ்சப்
இந்நிலையில், கேரள மாநிலம் காசர்கோடு நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் தங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்துள்ளனர். அந்த இளைஞரின் வாட்ஸ்-அப்புக்கு, 'வெல்கம் டூ தவ்லதுல் இஸ்லாம் த்வா குரூப்' என்று முதலில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ்
மேலும், 'அசலாமு அலேக்கும்' என்ற வார்த்தையுள்ள மெசேஜும் மறுநாள் வந்துள்ளது. இந்த மெசேஜ்களை பார்த்த இளைஞர், நீங்கள் யார் என்று கேட்டபோது, 'இஸ்லாமிக் ஸ்டேட்டை சேர்ந்த ஷமி' என்று பதிலில் கூறப்பட்டிருந்தது.
இளைஞர் அச்சம்
கடந்த சனிக்கிழமை அனுப்பப்பட்ட மெசேஜ்களில், இந்த இளைஞரின் கல்வி, வேலை குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன. மேலும், அரபிக் மொழியில், ஒரு ஆடியோ ஃபைலும் வந்தது. குரூப்பின் பெயர் ஐஎஸ் என்றும், முகப்பு படத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடியும் இடம் பெற்றிருந்ததால் இந்த இளைஞர் பயந்துவிட்டார்.
போலீசில் புகார்
இதையடுத்து குரூப்பை விட்டு வெளியேறிவிட்டார் அந்த இளைஞர். முன்னதாக, குரூப்பில் பரிமாறப்பட்ட தகவல்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஆதாரத்திற்கு வைத்துக்கொண்டார். கொச்சியில் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வரும் அந்த இளைஞர், நகர சைபர் கிரைம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
ஆள்பிடிக்கும் ஐஎஸ்ஐஎஸ்
போலீசார் விசாரணை நடத்தியதில், தீவிரவாத ஆதரவு குரூப் +1(509)871-0700 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.