அமெரிக்காவில் இன்று துவங்கும் 10-வது உலக தமிழ் மாநாடு.. சிகாகோவில் குவியும் தமிழர்கள்
சிகாகோ: 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்று துவங்குகிறது. இன்று துவங்கி வரும் 7-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வடஅமெரிக்கா தமிழ் சங்கம், சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து செய்துள்ளன.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் அரசு சார்பிலான 7 பேர் அடங்கிய குழுவும், 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க குடியரசுத்தலைவா் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் கலந்து கொள்ள முடியாத நிலையில், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கிறது
தமிழகத்திலிருந்து நவிப்பிள்ளை, சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர், ஜேம்ஸ் வசந்தன், சீர்காழி சிவசிதம்பரம், சல்மா, ஓவியர் மணியம் செல்வன், எழுத்தாளர்கள் ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்டு தலைவரும் எழுத்தாளருமான சி.மகேந்திரன், , ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர் சீனிவாசன், நாட்டுப்புற கலைஞர்கள் ராஜலட்சுமி, கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன், விடியன் நாதஸ்வரம், கல்வியாளர் பொன்னவைக்கோ, இயக்குனர் கரு.பழனியப்பன், மணி அருணாச்சலம், பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்
அமெரிக்காவில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 10,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, இங்கிலாந்து, மொரிஸியஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இருந்து ஏராளமான தமிழறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது
10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு இதுவரை 2,000 ஆய்வு கட்டுரைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 80 கட்டுரைகள் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை இம்மாநாட்டில் வாசிக்கப்படுவதோடு, புத்தகமாகவும் உருவாகும்!
உலக தமிழ் மாநாட்டில் அரசு செலவில் அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் சென்றுள்ள குழுவில், அதிமுக பேச்சாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர். தொலைக்காட்சி விவாதங்களிலும், பொது கூட்ட மேடைகளிலும் அதிமுகவை ஆதரித்து பேசி வரும் சமரசம், விடியல் முத்தரசன் உள்ளிட்ட 7 பேர் அரசு சார்பில் சென்றுள்ள குழுவில் உள்ளனர்.
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஒயிலாட்டம், கரகாட்டம், கிராமிய நடனம், நாட்டிய நாடகம், பட்டிமன்றம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலக தமிழ் மாநாடு குறித்து பேசிய வாஷிங்டன் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரானபார்த்தசாரதி கூறுகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தங்களின் அடுத்தடுத்த தலைமுறைகளும் தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டார்.