எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள்: சவுதியில் தவிக்கும் 110 இந்தியர்கள் தூதரகத்திற்கு கோரிக்கை
ரியாத்: சவுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் தவிக்கும் 110 இந்தியர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு இந்திய தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
சவுதியில் இருக்கும் ஜுபைல் நகரில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்று 110 இந்தியர்களை கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்தது. அவர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பள பாக்கியையும் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் ஜுபைலில் உள்ள தொழிலாளர் முகாமில் போதிய வசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இது குறித்து அந்த தொழிலாளர் முகாமில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். முருகன் கூறுகையில்,
கடந்த 2009ம் ஆண்டு நான் சவுதியில் உள்ள ஜுபைல் நகருக்கு வேலைக்கு வந்தேன். இந்நகரில் உள்ள அல் மோஜில் எம்எம்ஜி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அந்த நிறுவனம் எங்களுக்கு சம்பள பாக்கியை அளிக்காமல் பணிநீக்கம் செய்துவிட்டது.
முகாமில் நிலைமை சரியில்லை. ஒரு அறையில் 10 பேர் தங்கியுள்ளோம். ஒரு நாளில் இரண்டு முறை மட்டும் உணவு அளிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டு காலமாக நாங்கள் இங்கு தான் உள்ளோம். எனக்கு ஊருக்கு திரும்பிச் சென்று குடும்பத்தாரை பார்க்க வேண்டும்.
என் சம்பளம் இல்லாமல் என் குடும்பம் கஷ்டப்படுகிறது. என் மனைவி காந்திமதி அவ்வப்போது சிறு சிறு வேலைகளுக்கு செல்வார். எனது மகன்கள் வினோத், விஜய் மற்றும் மகள் வித்யா ஆகியோருக்காக நான் இங்கு வேலைக்கு வந்தேன். அவர்கள் அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிறுவனமோ இந்திய தூதரகத்தை அணுகுமாறு கூறுகிறது. ஆனால் நாங்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
தங்களை ஊருக்கு அனுப்பி வைக்க இந்திய தூதரகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 110 தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.