பாகிஸ்தானில் ரயில் கால்வாயில் விழுந்ததில் 14 பேர் பலி: தீவிரவாதிகளின் சதி?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயிலின் 4 பெட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 14 பேர் பலிகாயுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள புன்னோ அகாலில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சிறப்பு ரயில் ஒன்று குஜ்ராஜ் நகரில் உள்ள கரியன் கண்டோன்மென்டுக்கு நேற்று கிளம்பியது. ரயில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா அருகே இருக்கும் கனவா பாலத்தை கடக்கையில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் ரயிலின் 4 பெட்டிகள் கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில் மூத்த ராணுவ அதிகாரி அமீர் உள்பட 14 பேர் பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் ரயில் என்ஜின் டிரைவரும் அடக்கம். மேலும் மாயமாகியுள்ள 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சர் க்வாஜா சாத் ரபீக் கூறுகையில்,
இந்த ரயில் விபத்து தீவிரவாதிகளின் வேலையாகக் கூட இருக்கலாம். இது குறித்து உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது என்றார்.