சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்... 154 பயணிகள் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள்
கீவ்: சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 154 பயணிகள் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது.
நேற்று மதியம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17, உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம், கிரபோவோ என்ற கிராமம் அருகே சுமார் 15 கிமீ தூரத்திற்கு சிதறி விழுந்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேரும் உடல் கருகி பரிதாபமாகப் பலியானார்கள். இத்தகவலை உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த 295 பேரில் 154 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர 27 ஆஸ்திரேலியப் பயணிகள், 23 மலேசியப் பயணிகள், 11 இந்தோனேசியப் பயணிகள், 6 இங்கிலாந்து பயணிகள், 4 பெல்ஜியம் பயணிகள், 3 பிலிப்பைன்ஸ் பயணிகள் மற்றும் ஒரு பயணி ஆகியோரும் இதில் அடங்குவர். மேலும், 47 பயணிகளின் விவரம் இதுவரை சரிவர தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மலேசிய விமான விபத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 154 பயணிகள் உயிரிழந்ததால், நெதர்லாந்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.