3 வாரத்தில் மோசமான நிலைமை இத்தாலியில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 168 உயிரிழப்பு.. என்ன நிலவரம்
ரோம்: கொரோனா வைரஸால் பிரச்சனை வரப்போகிறது என்பதை அறிந்தவுடன் அதை எப்படி வராமல் தடுக்க போகிறோம் என்பதே முக்கியமானதாக ஒவ்வொரு நாட்டுக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக பிரச்சனை வந்துவிட்டது, அதை எப்படி குறைத்து இல்லாமல் செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இரண்டிலும் கோட்டை விட்டதால் இப்போது இத்தாலியில் கொரோனா வைரஸால் நிலைமை மிக மோசமாக உள்ளது
Recommended Video
ஆம் கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் இத்தாலி பரிதவித்து வருகிறது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் கொரானா வைரஸ் காரணமாக 168 பேர் பலியாகி உள்ளனர். சமீபத்திய நிலவரப்படி 10,149 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீனாவின் வுஹானில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு என தொற்று நோய் போல் பரவியதால் உலகின் 100 நாடுகளில் இப்போது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை சுமார் 4300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சவூதியில் இருந்து திரும்பிய முதியவர் கர்நாடகாவில் உயிரிழப்பு- கொரோனா தாக்கமா? என ஆய்வு
10 ஆயிரத்தை தாண்டியது
இந்நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி 631 பேர் சமீபத்திய நாட்களில் இறந்துள்ளார்கள். இத்தாலியில் கடந்த ஜனவரி 31ம் தேதி தான் முதல் கொரோனா நோயாளி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு மூன்று வாரங்கள் கடந்தும் வெறும் இருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அடுத்த மூன்று வாரங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
வயதானவர்கள்
இத்தாலியில் நேற்று மட்டும் ஒரே நாளில் 168 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 77 பேர் 70 வயது முதல் 89 வயதை கடந்தவர் என்று கூறப்படுகிறது. இதேபோல் 16 பேர் மட்டுமே 50 முதல் 69 வயதை கடந்தவர்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் 169 பேரும் கொரோனாவால் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் இறந்ததாக இத்தாலி சுகாதாரத்துறை கூறியுள்ளது.
முன்னெச்சரிக்கை
இத்தாலி அரசு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தவறியதே மோசமான பாதிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இத்தாலி முதியவர்களை அதிகம் கொண்ட நாடு, இதனால் தான் சீனாவைப் போல் இத்தாலியிலும் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இப்போது முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இத்தாலி அரசு. ஆனால் கிட்டத்தட்ட பலருக்கும் அந்நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற அச்சம் நிலவுவதால் அடுத்தடுத்த நாளில் நிலைமை இத்தாலியில் மோசமாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
மக்கள் என்ன செய்ய வேண்டும்
இத்தாலியிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்றால் வெறும் 3 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அது அடுத்த சில நாட்களில் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. எந்ந அளவுக்கு கொரோனா அதிவேகமாக பரவி உள்ளது என்பதற்கு இதுவே ஆதாரம். எனவே இத்தாலி, சீனா உள்பட எந்த நாட்டில் இருந்து இந்தியா வந்தாலும் அரசுக்கு உடனே தெரிவிப்பது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தனிமையில் இருந்து சிகிச்சை பெறுவது அவசியம். இதேபோல் பொதுமக்கள் சுய சுத்தம் மற்றும் அரசு மற்றும் சுகாதாரத்துறை சொல்வதை கடைபிடிப்பது நல்லது. மாறாக வாட்ஸ் அப்,பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவற்றில் வரும் வதந்திகளை நம்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம். பயப்பட வேண்டாம்.