காதலுக்கு கண்கள் இல்லை மானே.. காலையில் வாக்கிங் சென்றவருக்கு கிடைத்த வாழ்க்கை! 70 வயதை கைபிடித்த 19!
இஸ்லாமாபாத் : காதலுக்கு கண்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து தான் வருகிறது. அந்த வகையில் காலையில் வாக்கிங் சென்ற போது 70 வயது முதியவரின் பாடலால் கவரப்பட்ட 19 வயது இளம் பெண் அவரை காதலித்து திருமணம் செய்து இருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். அம்பிகாபதி அமராவதி, பார்த்ததும் காதல், பார்க்காமலே காதல், கடிதத்தில் காதல், வாட்ஸ் அப்பில் காதல் என காதலில் பல வகைகள் வந்து விட்டது.
ஆனால் காதல் மட்டும் அப்படியே இருக்கிறது, உலகம் முழுவதும் உயிரனங்களுக்கு இடையே உள்ள ஒரு பொதுவான மொழி காதல். காதல் எப்போது வரும் யாருக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் கண்டிப்பாக வரும்.

காதல்
இந்த உலகத்தில் காதலித்ததே இல்லை என்று யாராலும் கூற முடியாது. ஏதோ ஒரு தருணத்தில் ஒரு நிமிடம் காதல் எனும் உணர்வு ஒருவர் மீது மற்றொருவருக்கு கண்டிப்பாக வந்திருக்கும். காதலுக்கு பணம், மொழி, தேசம், பாலினம், வயது என எதுவுமே தெரியாது. அது வந்து விட்டால் மட்டும் போதும் பிறகு எல்லாமே காதல் மயமாகிவிடும், அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் ஒரு காதல் வெகுவாக பாராட்டப்பட்டு வரும் அதே நேரத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானில் சுவாரசியம்
நடைபயிற்சியின் போது 70 வயது முதியவர் பாடிய பாடலால் அவர் மீது காதல் வயப்பட்ட இளம் பெண் ஒருவர் பலத்த எதிர்ப்புகளுக்கு பிறகும் அவரையே மணமுடித்திருக்கிறார் . வேறு எங்கு அல்ல அண்டை நாடான பாகிஸ்தானில் தான். பாகிஸ்தான் நாட்டின் லாகூரைச் சேர்ந்த ஷுமைலா என்ற 19 வயது இளம் பெண் தான் லியாகத் என்ற 70 வயது முதியவரை கரம் பிடித்திருக்கிறார். 70 வயதானாலும் தினமும் அதிகாலையில் லியாகத் தனது வீட்டிற்கு அருகில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

நடைபயிற்சியில் காதல்
அதே பகுதியில் ஷுமைலாவும் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்போதுதான் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்ததும் ஷுமைலா மீது லியாகத்துக்கு காதல் வந்திருக்கிறது. இதை அடுத்து ஷுமைலா நடை பயிற்சி மேற்கொள்ளும் போதெல்லாம் பின்னாலே சென்று பாடல் பாடி கவர முயற்சித்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் லியாக்கத்துக்கும் ஷுமைலாவுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு பேசத் தொடங்கி இருக்கின்றனர். இதை அடுத்து அவரை காதலிப்பதாக லியாக்கத் கூறி இருக்கிறார்,

பெற்றோர் எதிர்ப்பு
அதனை ஷுமைலாவும் ஏற்றுக்கொள்ள இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் அவரது பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தங்களுக்கு இடையேயான காதலை எடுத்துக் கூறி சம்மதம் வாங்கியுள்ளார் ஷுமைலா. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். காதல் வயது பார்ப்பதில்லை அது தானாகவே நடந்து விடுகிறது என தங்கள் காதல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார் ஷுமைலா.

வயது இல்லை
மேலும் தனக்கு 70 வயது என்பது உடல் அளவில்தான் மனதளவில் மிகவும் இன்னும் இளமையாக இருக்கிறேன். காதல் என்று வந்துவிட்டால் வயது என்பது ஒரு பொருட்டல்ல. தற்போது எனது மனைவி மிகவும் அருமையாக சமைக்கிறார். இதனால் நான் ஹோட்டலில் சாப்பிடுவதையே விட்டு விட்டேன் என்று கூறுகிறார் 70 வயது இளைஞர் லியாகத். தற்போது இந்த காதல் தம்பதிக்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications