"சென்னை"யாக மாறியது சீனா.. வரலாறு காணாத மழை.. 225 பேர் பலி.. பல லட்சம் பேர் தத்தளிப்பு!
பெய்ஜிங்: சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக அங்கு வெள்ளக்காடாகியுள்ளது. எப்படி சென்னை நீரில் மூழ்கித் தவித்ததோ அதேபோல சீனாவிலும் ஹூபே மாகாணத்தில் உள்ள நகரங்கள் தத்தளிக்கின்றன. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 225 பேர் பலியாகியுள்ளனர்.
ஹூபே மாகாணத்தில் 2.5 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். 10 நகரங்களில் மொத்தமாக 6.8 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தடங்கலாகியுள்ளன.
500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், 1000க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர், 62 படகுகள் மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவர பத்தாயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 52,900 வீடுகள் இடிந்து தரை மட்டமாகி விட்டன. 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
7 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்களில் பயிர்கள் அழிந்து போய் விட்டன. கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டக்ஸியான் என்ற நகரம்தான் வெள்ளத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இந்த நகரின் பெரும் பகுதி வெள்ளத்தில் சிதிலமாகி விட்டது.