நேபாளத்தில் கனமழை...30 பேர் பலி.... மண்ணில் புதைந்த 6 கிராமங்கள்
காத்மண்டு: நேபாளத்தில், நேற்றிரவு பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 6 கிராமங்கள் மண்ணில் புதையுண்டன. இதில் உறக்கத்திலேயே 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 20க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் வடகிழக்குப் பகுதியில் டப்லேஜங் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்தது. நேற்றிரவு மழை தீவிரமடைந்த நிலையில், அங்குள்ள 6 கிராமங்களில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது வீடுகளில் துாங்கிக்கொண்டிருந்தவர் 30 பேர் மண்ணில் புதைந்தனர். அவர்கள் அனைவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது மேலும் பலரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அடர்த்தியான மலைகள் அடங்கிய பகுதியாக இருப்பதால், இக்கிராமத்திற்கு மீட்பு படையினர் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது.
நேபாள நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமே இன்னும் மறையவில்லை. நில அதிர்வுகள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பலரது உயிரை காவு வாங்கியுள்ளது.