ஈரான் கடல் பகுதியில் சிக்கிய தமிழக மீனவர்கள்! நிலைமை என்ன? கன்னியாகுமரி மக்கள் அச்சம்!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் வளைகுடா முழுவதும் போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஈரான் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 50 பேர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து வேலைக்காக சென்ற மீனவர்கள்தான் அங்கு சிக்கியிருப்பதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர், ஈரானில் சிக்கி தவிப்பதாகவும் அவரை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மீனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மீனவர்களின் குடும்பத்தினர், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து குடுப்பத்தினர் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த, 51 மீனவர்கள் ஈரானுக்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றிருக்கிறார்கள். ஈரானில் போர் மூண்டிருப்பதால், அங்குள்ள தமிழர்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார்கள். எனவே அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று நாங்கள், எம்பி விஜய் வசந்த் உடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இதற்கு முன்னரும் அரசு கொரோனா காலத்தில் இதேபோன்று முயற்சியை மேற்கொண்டிருந்தது. எனவே தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தனர். அதேபோல இந்த முறையும் மீட்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 51 மீனவர்கள் சிக்கியிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications