துபாயில் மதுபான பாரில் பக்கத்தில் இருந்த நபரை தொட்ட பிரிட்டன் சுற்றுலா பயணிக்கு 3 ஆண்டு சிறை!
துபாயில் மதுபான பாரில் பக்கத்து நபரை தொட்டதால் பிரிட்டன் சுற்றுலா பயணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
துபாய் : துபாயில் பார் ஒன்றில் மது அருந்திய போது தவறாக கை பட்டதால் பிரிட்டன் சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
துபாயில் ''ராக் பாட்டம்'' என்ற தனியார் பாரில் மதுகுடித்த போது ஜேமி ஹார்ரன் என்ற பிரிட்ட சுற்றுலா பயணி பக்கத்தில் இருந்த நபரை தொட்டு உள்ளார். இதையடுத்து பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பிரிட்டன் சுற்றுலா பயணி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜேமி ஹார்ரனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். பிரிட்டன் குடிமகனான ஜேமி ஹார்ரன் கடந்த மூன்று மாதமாக துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வெளியே வருவதற்கு மட்டும் 30,000 யூரோ செலவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 23 லட்சம் ரூபாய் ஆகும். கடும் முயற்சிகளுக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த ஜேமி, துபாயில் இப்படி ஒரு சட்டம் இருப்பதே எனக்கு தெரியாது. நான் அந்த நபரை தெரியாமல் தான் தொட்டேன். அவர் வழியில் நின்றதால் மட்டுமே அவரைத் தொட நேர்ந்தது என்று கூறியுள்ளார்.
துபாயில் பொதுவாக வெளிநாட்டினர் மீது கடுமையான சட்டங்கள் பிரயோகப்படுத்தப் படுவதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மிகவும் கொடூரமான, மனித தன்மையற்ற செயல் என்று பிரிட்டன் அரசு சாடியுள்ளது.