எம்.ஹெச் 17 விமான விபத்து: காதலிக்கு கொடுத்த கடைசி முத்தம்
பாலி: ஒரு விமான விபத்து எண்ணற்ற சோகங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலைதேடி பயணித்தவர்கள், மறுமணத்திற்காக காதலியைக் காணச் சென்றவர்கள் என எத்தனையோ பேரின் உயிரைக்குடித்துள்ளது மலேசிய விமான விபத்து.
விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் ஒவ்வொன்றாக சொல்லச்சொல்ல அதைக் கேட்பவர்களின் கண்களில் இருந்து தானாக வழியும் கண்ணீரை துடைக்கக் கூட முடியவில்லை. கணவனை இழந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்வதற்காகச் சென்ற வில்லெம் குரூட்ஷால்டனின் மரணமும் கூட இத்தகையதொரு சோக நிகழ்வுதான்
புது வாழ்வைத் தேடி பயணம்
நெதர்லாந்தில் முன்னாள் ராணுவ வீரராக இருந்தவர் வில்லெம் குரூட்ஷால்டன். இவருக்கு வயது 53. இவர் விவாகரத்து செய்யப்பட்டவர். இவர் தனது வீட்டை விற்றுவிட்டு பாலியில் தனது புதிய காதலி கிறிஸ்டினுடன் புதுவாழ்வைத் தொடங்கத் திட்டமிட்டார்.
நன்றியில் தொடங்கிய நட்பு
இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது ஒரு சுவாரஸ்யமான கதை. ஒருநாள் ஒரு நபர் பாறை ஒன்றிலிருந்து தவறி விழுந்து முதுகில் கடும் காயமடைந்ததாக தன் நண்பர் மூலம் கேள்விப்பட்டார் கிறிஸ்டின். உடனே அந்த நபரை தனக்குத் தெரிந்த ஒரு மரபு வைத்தியரிடம் சிகிச்சைக்குக் கூட்டிச்செல்ல அதே நண்பரிடம் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் குரூட்ஷால்டன், கிறிஸ்டினை அழைத்து தன் நன்றியைக் கூறினார். அதாவது பாறையிலிருந்து விழுந்த நபர் குரூட்ஷால்டந்தான்.
நெருக்கமான உறவு
இருவரும் ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்கின்றனர். அதன் பிறகு இவர் நெதர்லாந்து திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு அவர் கஃபே ஒன்றில் பவுன்சராக பணியாற்றி வந்தார். ஆனால் இருவரும் தொடர்ந்து ஆன்லைனில் தொடர்பில் இருந்தனர். அவர்கள் உறவு நெருக்கமானது.
இன்ப அதிர்ச்சி கொடுத்த குரூட் ஷால்டன்
கிறிஸ்டினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவரது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார். அதனால் தனது குழந்தைகளுடன் தனியாகத்தான் வசித்து வருகின்றனர்.
ஒருநாள் புதுவருட தினமொன்றில் கிறிஸ்டின் வீட்டிற்கு திடீர் வருகை தந்து சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்த்தினார் குரூட்ஷால்டன், அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்தார்.
வாழ்வில் இணைய விருப்பம்
குழந்தைகளுக்கு குரூட்ஷால்டனைப் பிடித்துப் போக டாடி என்றே அவரை அழைக்கத் தொடங்கினர். கடந்த மே மாதம் குரூட்ஷால்டன் பாலிக்கு சென்று கிறிஸ்டின் பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது கிறிஸ்டினுடன் தன் மீதி வாழ்நாளைக் கழிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடைசி முத்தம்
ஜூன் 3ஆம் தேதி அவரை விமானநிலையத்தில் வழியனுப்ப வந்தார் கிறிஸ்டின். முத்தத்துடன் குட்பை சொன்னார் கிறிஸ்டின். இதுதான் அவர்களது கடைசி முத்தம்.
வராமல் போன காதலன்
ஜூலை 17ம் தேதி எம்.ஹெச் 17 மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயண தினத்தன்று விமான நிலையம் செல்லும் முன்பாக ஸ்கைப் உரையாடலில் "தந்தை உங்களைக் காண வந்து கொண்டிருக்கிறேன்... இனி நாம் ஒன்றாகவே இருப்போம்" என்று காதலியிடம் கூறியதே கடைசி உரையாடலாகிப்போனது.
இதுபோன்ற எண்ணற்ற கனவுகளை சுமந்து கொண்டு வந்தவர்கள் அனைவரும் விபத்தில் சிக்கி கருகிப் போனதுதான் சோகம்