ஃபிடல் காஸ்ட்ரோ... புரட்சி தலைவன்!
-எஸ் ஷங்கர்
முதலாளித்துவ உலகின் பார்வையில் அவர் ஒரு சர்வாதிகாரி. மற்றவர்களுக்கு ஒரு கண்டிப்பு நிறைந்த நிர்வாகி.
ஆனால் இன்று க்யூபா என்ற நாட்டைப் பற்றி உலகமே இத்தனை அக்கறையுடன் தேடிப் படிக்கக் காரணம், இந்த ஃபிடல் காஸ்ட்ரோதான். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றோ அமெரிக்காவின் 53வது மாநிலமாகியிருக்கும் க்யூபா என்பதில் எந்த மிகையுமில்லை.
ஒரு கரும்புத் தோட்ட கூலியாகப் பிறந்து, எளிய பின்னணியில் உருவான இரும்பு மனிதனான ஃபிடல் காஸ்ட்ரோ கல்லூரியில் போராளியானவர்.

பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.
அப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுதான், பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளியாகி, புரட்சியை நேசிப்பவர்களின் ஆதிப் பாடமானது.
புரட்சி மூலம் பாடிஸ்டா அரசை வீழ்த்த காஸ்ட்ரோவும் சே குவேராவும் 1953 முதல் 1959 வரை ஐந்தரை ஆண்டுகள் போராடினர்.
1959-ல் காஸ்ட்ரோ தலைமையில் அமைந்த அரசு, க்யூபாவை கம்யூனிஸ்ட் நாடாக அறிவித்தது. அன்றிலிருந்து கடைசி வரை அமெரிக்காவின் எந்த நெருக்கடிக்கும் பணியாமல் பார்த்துக் கொண்டார். நாட்டின் வளங்கள் அனைத்தும் க்யூப மக்களுக்கே என அறிவித்தார்.

'உலகத்தில் எந்த மூலையிலும், சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்... உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் நமது சகோதரர்கள்' என்ற காஸ்ட்ரோ, இந்தியாவின் உற்ற தோழனாகவும் திகழ்ந்தார். குறிப்பாக அமரர் இந்திரா காந்தி காலத்தில் இந்திய - க்யூப உறவு உன்னதமாகத் திகழ்ந்தது.
காஸ்ட்ரோவுக்கு எதிரான கொலை முயற்சியின் எண்ணிக்கையே கூட தனி சாதனைதான். நம்புங்கள்... 638 முறை. அத்தனையும் அமெரிக்காவின் உளவு நிறுவனம் சிஐஏவின் வேலை!
இறுதியாக ஃபிடல் காஸ்ட்ரோவை அவரது காதலியை வைத்தே கொல்ல முயற்சித்துள்ளனர். இதனை அறிந்த காஸ்ட்ரோ, தனது காதலியின் கையிலேயே துப்பாக்கியைக் கொடுத்து, 'ரொம்ப சிரமப்பட வேண்டாம்... இந்தா சுட்டுத் தள்ளி உன் அசைன்மென்ட்டை முடித்துக் கொள்" என்றாராம். துப்பாக்கியை வீசி எறிந்து கதறி அழுதாராம் காதலி.
இதுபோல ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்று சிஐஏ செய்த பல நூறு முயற்சிகள் பலனளிக்கவில்லை. மக்களின் அன்பே அவர் உயிருக்குக் கவசம்.

க்யூபா என்ற சின்னஞ்சிறிய தேசத்துக்கு பொருளாதார ரீதியிலும் உலக வரைபடத்தில் முக்கியத்துவம் கிடைக்கச் செய்த பெருமை காஸ்ட்ரோவுக்கு உண்டு. எத்தனை நெருக்கடிகள், போர்களுக்கு மத்தியிலும் நாட்டை நிலைகுலைந்து விடாமல் வழி நடத்தினார்.
க்யூபா மீது அமெரிக்கா விதித்த பெட்ரோலியப் பொருட்கள் நெருக்கடியை அவர் சமாளித்த விதம், மக்களை அதற்காக அவர் தயார்ப்படுத்திய விதத்தை பண ஒழிப்பு புகழ் மோடிகள் தேடிப் படிக்க வேண்டும்.

க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).
கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா. 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது. மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான். உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.
2010ல் 85 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள். இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
- தொடர்ந்து 40 ஆண்டுகள் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகள், போதிய மருந்துகள் கிடைக்காத அவலத்துக்கு மத்தியிலும் க்யூபா சாதித்தவற்றில் சில இவை.

காரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
க்யூபாவின் சர்வாதிகாரியாகத் திகழ்கிறார் ஃபிடல் காஸ்ட்ரோ என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, அதை உலகளாவிய பிரச்சாரமாக முன்வைத்து வந்தது. அதற்கு ஃபிடல் காஸ்ட்ரோ அளித்த பதில், "உண்மையில் க்யூப அரசியல் அமைப்புச் சட்டப்படி எனக்கு அதிகாரங்களே குறைவுதான். என்னைவிட ஒரு மாநில கவர்னருக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. மக்கள் அதிகாரத்தைவிட, அன்புக்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டிருக்கிறார்கள்," என்றார்.
க்யூபாவில் என்ன ஜனநாயகம் இருக்கிறது... என்று இன்னொரு குற்றச்சாட்டு. அதற்கு காஸ்ட்ரோவின் பதில் இது...
ஜனநாயகம் என்பது என்ன? மனிதனை மனிதன் சுரண்டாமல், தனது முழு சுதந்திரத்துடன் வாழ்வது. அப்படிப் பார்த்தால் க்யூபா உண்மையான ஜனநாயக நாடு. யாரையும் சுரண்டாமல் சமத்துவத்துடன் வாழ்க்கிறார்கள். சமூக சமமின்மை இருக்கும் இடத்தில் எப்படி ஜனநாயகம் இருக்கும், என்றார்.

'இழிவான அடிமைத்தனத்தில்
ஒருவன் வாழும்போது
கண்ணீர் துளிகள் மட்டும் போதா!'
- காஸ்ட்ரோவின் புகழ்மிக்க வரிகள் இவை. அடிமைப்பட்ட மக்களின் விடுதலைக்கான சாசனம்.
போலி தேசியம் பேசிக் கொண்டிருக்காமல், தன் மக்களின் அடிமைத்தனத்தை நீக்கியது மட்டுமல்ல, அவர்களை சாதனைப் படைப்பவர்களாகவும் மாற்றிய பெரும் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ.
வீர வணக்கங்கள்!












Click it and Unblock the Notifications