மத்திய அரசின் தடையை மீறி நிர்பயா ஆவணப்படம் பிபிசியில் ஒளிபரப்பு
லண்டன்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த டெல்லி மருத்துவமாணவி நிர்பயா குறித்த ஆவணப்படம் மத்திய அரசின் தடையை மீறி பிபிசியில் ஒளிபரப்பானது.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் டெல்லியில் ஓடும் பேருந்தில் இரவு 11 மணிக்கு தனது நண்பருடன் பயணித்த மருத்துவமாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்தது. அதோடு அவரை உயிர்போகும் அளவிற்கு ரணமாக்கி சாலையோரம் வீசியது. உடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு ஆளானார்.
இந்த பலாத்கார சம்பவம் பற்றி ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் இங்கிலாந்து தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின், கடந்த 2 ஆண்டுகளாக பாடுபட்டு இந்த படத்தை எடுத்துள்ளார்.
இந்த பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் என்பவனை லெஸ்லி உட்வின் பேட்டி கண்டுள்ளார்.
ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு
இந்த ஆவணப்படத்தை உலக பெண்கள் தினமான வரும் 8ஆம் தேதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப பி.பி.சியும், என்டிடிவி தொலைக்காட்சியும் திட்டமிட்டிருந்தது. குற்றவாளி கூறியிருந்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகின. குற்றவாளியின் திமிர்தனமான பேச்சுக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
ராஜ்யசபாவில் அமளி
இந்நிலையில் இந்த ஆவணப்படம் எடுக்க அனுமதி வழங்கியது குறித்தும், குற்றவாளியின் பேட்டி குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி நோட்டீஸ் அளித்தார். இதையடுத்து நேற்று ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள், எப்பொழுது நிர்பயா குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்று கேள்வியெழுப்பினர். குறிப்பாக ஜெயா பச்சன் உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் மிகுந்த ஆவேசத்துடன் பேசினர்.
ஒளிபரப்பத்தடை
லோக்சபாவிலும் இதே நிலை தான் நீடித்தது. எம்.பி.க்களின் ஆவேச பேச்சுக்கு பின் பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்பயா கொலை குறித்த ஆவணப்படம் ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாகவும், குற்றவாளியிடம் பேட்டி காண அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிபிசியில் ஒளிபரப்பு
இந்நிலையில் இந்தியா தடை விதித்துள்ள போதும், அதிகாலை 3.30 மணியளவில் நிர்பயா குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது. இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது.
நிர்பயா குடும்பத்தினரின் சம்மதம்
ஆவணப்படத்தை பார்ப்பதற்கான விருப்பம் அதிகரித்ததால், முன் கூட்டியே ஒளிபரப்பியதாக பி.பி.சி. கூறியுள்ளது. இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களின் ஒப்புதலுடன் தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது என்றும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.
நோக்கம் என்ன?
இதனிடையே இந்தப்படத்தை எடுத்த காரணம் என்ன என்று இங்கிலாந்து தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின் கூறியுள்ளார். பாலின பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் எனது நோக்கம். இந்த பலாத்கார சம்பவத்துக்கு எதிராக இந்திய மக்கள் ரோட்டில் வந்து போராட்டம் நடத்தியது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனென்றால் நானே பலாத்காரம் செய்யப்பட்டவள்தான். இதில் எனக்கொன்றும் வெட்கம் இல்லை. வெட்கப்பட வேண்டியது பலாத்காரம் செய்தவர்கள்தான்.
பலாத்கார குற்றவாளிகள்
பலாத்கார குற்றவாளிகளை நான் ஏன் சந்தித்து பேட்டி எடுத்தேன் என கேட்கிறீர்கள். ஆண்கள் ஏன் பலாத்காரம் செய்கிறார்கள்? இது ஏன் நடக்கிறது? என்ற கேள்விகளுக்கு அர்த்தமுள்ள பதிலை பெற எனக்கு வழி தெரிந்தது. அதை குற்றவாளிகளிடம் இருந்து கேட்க வேண்டியிருந்தது.
விடை தெரியவேண்டும்
அவர்களுடன் உட்கார்ந்து, பெண்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நல்ல பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எது பெண்களை மோசமானதாக காட்டுகிறது? என நூற்றுக்கணக்கான கேள்விகளை கேட்க வேண்டியிருந்தது. அவர்களின் மனநிலை நான் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர்களை நான் சந்திக்காமல் இருந்திருந்தால், பலாத்காரம் நடப்பது ஏன் என்ற கேள்விக்கு எனக்கு விடை கிடைத்திருக்காது.
ஆண்கள்தான் பொறுப்பு
பலாத்காரம் என்ற நோய்க்கு காரணம் பலாத்காரம் செய்தவர்கள் அல்ல. சமூகம்தான். பெண்களை ஒரு பொருட்டாக ஆண்கள் மதிக்காததை ஊக்குவிக்கும் சமூகம்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்தியர்கள் பார்க்கவேண்டும்
இதை முதலில் இந்தியாவில் காட்ட வேண்டும். இந்தியர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்'' என்றார். இந்த குறும்படத்தை எடுக்க கடந்த 2013ம் ஆண்டு திகார் சிறை டைரக்டர் ஜெனரலிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தேன். அவர் மத்திய உள்துறை அமைச்சக்கத்துடன் கலந்து ஆலோசித்து 2 வாரங்களில் அனுமதி அளித்தார். படத்தை ஒளிபரப்ப சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் லெஸ்ஸி கூறியுள்ளார்.