உக்ரைன் யுத்தத்தை நிறுத்த விரும்பும் ரஷ்யா.. தைவானை ஆக்கிரமிக்க 39 போர் விமானங்களை பறக்கவிட்ட சீனா
மாஸ்கோ/தைபே: உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை முடிவுக்கு வர விரும்புவதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு. அதேநேரத்தில் தைவானை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தைவான் நீரிணையில் 39 போர் விமானங்களை சீனா பறக்கவிட்டிருப்பது பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தைவான் நீரிணையில் 3 சீனா போர்க்கப்பல்களும் வலம் வருவதும் இந்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்புடன் இணக்கமாக இருந்த நாடு உக்ரைன். அண்டை நாடுகள் அடுத்தடுத்து அமெரிக்காவுடன் கை கோர்த்து கொண்டிருப்பதை ரஷ்யா அதிபர் புதின் விரும்பவில்லை. இதனால் உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் யுத்தத்தை தொடங்கினார் புதின்.
கடந்த 10 மாதங்களாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனை பேரழிவுக்குள்ளாக்க ரஷ்யா இடைவிடாத தாக்குதல்கள் நடத்திய போதும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஆயுத பலங்களின் அடிப்படையில் அந்நாட்டு வீழ்ந்துவிடாமல் எதிர்கொண்டு போர்க்களத்தில் நிற்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஜெலென்ஸ்கி உரையாற்றினார். இந்த நிலையில் உக்ரைன் மீதான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக அதிபர் புதின் அறிவித்துள்ளார். மேலும் விரைவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்போம் எனவும் புதின் கூறினார். இதனால் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்திய 10 மாத உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தைவான் நாட்டை ஆக்கிரமிக்க சீனா இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக தைவான் நீரிணைப் பகுதிக்கு 39 போர் விமானங்களை சீனா அனுப்பி இருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ அரசு அமைவதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் தைவானுக்கு சென்று தஞ்சமடைந்தனர். தைவான் நாடுதான் உண்மையான சீனா என 1970கள் வரை சர்வதேச உலகம் அங்கீகரித்தது. ஐநாவும் தைவான் நாட்டைத்தான் ஒரிஜனல் சீனா என அங்கீகரித்து வந்தது. 1970களுக்கு பிந்தைய உலக ஒழுங்குகளில் தைவான் தனித்துவிடப்பட்டு இன்றைய சீனாவை சர்வதேசம் ஏற்றுக் கொண்டது. இப்போது சீனா உலகின் வல்லரசுகளில் முதன்மையான நாடாக இருக்கிறது. இந்த நிலையில் தைவானும் தங்களது நாட்டின் ஒரு பகுதி; தைவான் என்ற தனிநாடு எங்களுக்கு சொந்தமானது என கொக்கரிக்கிறது சீனா.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் தொடங்கிய நாளில் இருந்தே, சீனாவும் தைவானை ஆக்கிரமிக்கும் என்கின்றன சர்வதேச செய்திகள். சீனாவும் தைவானை மிரட்டும் வகையில் அத்துமீறி போர் விமானங்களை ஊடுருவ செய்வது, தைவானை சுற்றிலும் போர்க்கப்பல்களால் முற்றுகையிட செய்வது என அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 39 போர் விமானங்களை சீனா தைவான் பிராந்தியத்துக்குள் ஊடுருவ செய்திருப்பது அப்பகுதியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தைவான் தரப்பு தெரிவிக்கையில், சீனாவின் அத்துமீறலையும் ஊடுருவலையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனாவின் அத்துமீறல் நீடிக்குமானால் உரிய பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தயங்கமாட்டோம். சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை சர்வதேசம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூறியுள்ளது.