டல்லாஸ் பறை இசை விழாவில் புலிட்சர் விருது பெற்ற தமிழர் பழனி குமணன்!
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 2015ம் ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழனி குமணன் பங்கேற்கிறார்.
பழனி குமணன் யார்?
தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் - பார்வதி ஆகியோரின் மூத்த புதல்வர் இவர். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும்.
ஆரம்பப் பாடசாலை முதல் கல்லூரி வரை மதுரையில் பயின்ற பழனி குமணன், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் கணிணித்துறை முதுகலைப் பட்டத்தை முடித்த பின்னர் மென்பொருள் வல்லுனராக தனது பயணத்தை தொடங்கினார்.
பின்னர், IBM T.J. Watson Research Center ல் சேர்ந்து நியூயார்க் வந்தார். பல்வேறு புதிய தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, மென்பொருள் உரிமம் (software patents) பெற்றார். பல ஆராய்ச்சி கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு முதல் The Wall Street Journal குழுமத்தில் Technical Architect ஆக பணியாற்றி வருகிறார்.
அவருடைய பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. Business Journalism in Online Enterprise என்ற பிரிவில் 2012 ம் ஆண்டு அவருக்கு Gerald Loeb Award வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் 'முதல் மென்பொருள் வல்லுனர்' பழனி குமணன் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கைத் துறையின் மிக உயரிய விருதான Pulitzer Award ஐ தன் குழுவுடன் பழனி குமணன் 2015 ம் ஆண்டு பெற்றார். Investigative Journalism பிரிவில். ‘creating the interactive database that allows for easily accessible Medicare payment information' பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பத்திரிக்கை ஆராய்ச்சி கட்டுரைகளுக்காக, மென்பொருள் கட்டமைப்பை தொடர்ந்து பலப்பல புதிய யுத்திகளுடன் செயல்படுத்தி வருகிறார். The Wall Street Journal ல் இடம்பெறும் முக்கியமான பல ஆராய்ச்சி கட்டுரைகளில் பழனி குமணனுக்கு பெரும் பங்கு உண்டு.
மனைவி லதா மற்றும் குழந்தைகள் மீரா, கிருஷ்ணாவுடன் நியூயார்க் நகரில் பழனி குமணன் வசித்து வருகிறார்.
தாண்டவக்கோனே பறை இசை நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் அவர், டாலஸ் நகர குழந்தைகளுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.