பிரேசிலில் பாலம் இடிந்து 2 பேர் சாவு: உலக கோப்பையால் வந்த விபரீதம் என மக்கள் போராட்டம்

பிரேசில் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு ஏற்பாட்டுக்காக பல கோடி செலவு செய்த பிரேசில் அரசை விமர்சனம் செய்து மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தந்துவிட்டு ஆடம்பரத்திற்கு செலவு செய்திருக்க வேண்டும் என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஒன்றான மினைரா மைதானம் அமைந்துள்ள, பெலோஹரிசான்ட் நகரில் கட்டுமான நிலையில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது. அப்போது பாலத்தின் அடியில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பஸ், 2 லாரிகள், ஒரு கார் அப்பளமாக நொறுங்கின.
இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர். 2 பேர் உயிரிழந்தனர். இதை கேள்விப்பட்டதும், உள்ளூர் மக்கள் அங்கு திரண்டு போராட்டங்கள் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவர் கூறுகையில், "கடந்த பல வருடங்களாகவே, உலக கோப்பை வேலையை மட்டுமே பிரேசில் அரசு பார்த்துக்கொண்டிருந்தது. மக்களை கவனிக்கவில்லை. எங்களுக்கு தேவை, தரமான மருத்துவமனை, தரமான கல்வி மட்டுமே. இதுபோன்ற விபத்துகள் எங்களுக்கு தேவையில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications