பாலியல் குற்றம்: 588 வீரர்களை நீக்கிய அமெரிக்க ராணுவம்
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் அதிரடியாக 588 படை வீரர்களை சில முக்கியப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக பாலியல் தாக்குதல் தொடர்பான ஆலோசகர்கள், வேலை நியமனப் பொறுப்பில் இருப்போர் இதில் அடங்குவர். இவர்கள் மீது குடித்து விட்டு வாகனம் ஓட்டியது, சிறார்களை அடித்துத் துன்புறுத்தியது, பாலியல் தாக்குதல்கள், உள்ளிட்ட புகார்கள் வந்ததால் இவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் உத்தரவின் பேரில் இவர்கள் மாற்றப்பட்டுள்ளனராம். அமெரிக்க ராணுவத்தில் பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாறுதல்கள் உள்ளன.
20 ஆயிரம் பேரில்....
கிட்டத்தட்ட 20,000 வீரர்களின் ஆவணங்கள், அவர்களின் நடத்தை, மீதான புகார்கள் ஆகியவற்றை ராணுவம் பரிசீலித்து அதிலிருந்து இந்த 588 பேரை மட்டும் நீக்கியுள்ளது.
ஆசிரியர்களும் அடக்கம்...
ராணுவப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணி புரிவோரும் கூட இதில் அடக்கமாம்.
தெளிவான விவரமில்லை...
தற்போது இவர்களுக்கு வேறு வேலை தரப்பட்டுள்ளதா அல்லது வேலையை விட்டே விரட்டியடிக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
முக்கியப்பணி...
இந்த நடவடிக்கை குறித்து லெப்டினென்ட் கர்னல் அலயென் கோன்வாய் கூறுகையில், இந்தப் பதவிகளுக்கு மிகச் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்தப் பணியானது எவ்வளவு முக்கியம் என்பதை இதில் உள்ளவர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
கடற்படையில் 5 பேர்...
இதேபோல கடற்படையில் 11,000 ஊழியர்களைப் பரிசோதித்து அதில் 5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனராம். விமானப்படையில் இதுபோன்ற பிரச்சினை வரவில்லை என்று தெரிகிறது.
களையெடுப்பு...
கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் பல பாலியல் புகார்கள் படையெடுத்துக் கிளம்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதையடுத்தே தற்போது களையெடுப்புப் பணிகள் நடந்துள்ளன.












Click it and Unblock the Notifications