தாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்!
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், கொரோனா சடலங்கள் குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் சேமிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா அலை அலையாகத் தாக்குவதால், வைரஸ் பாதிப்பு சில காலம் குறைந்ததைப் போலத் தோன்றினாலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தான் இப்போது உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தாய்லாந்து கொரோனா
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து நாட்டில் கடந்த சில வாரங்களாகவே டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் அங்கு 18,912 பேருக்குப் புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 597,287ஆக உயர்ந்துள்ளது. அதேபோல சனிக்கிழமை மட்டும் 178 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனா சடலங்கள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு அருகில் உள்ள தம்மசத் பல்கலைக்கழக மருத்துவமனையில்,பொதுவாக ஒரு நாளைக்கு ஏழு சடலங்களுக்குப் பிரேதப் பரிசோதனை செய்ய முடியும். ஆனால் கொரோனாவின் இந்த அலையால் தினசரி இங்கு வரும் சடலங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள பிணவறை நிரம்பியுள்ளதால், கொரோனா சடலங்களை கண்டெய்னர்களில் சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள்
இது குறித்து மருத்துவமனையின் இயக்குநர் ஃபருஹத் டோர்-உடம் கூறுகையில், "எங்களுக்கு மருத்துவமனையில் போதிய இடம் இல்லை. எனவே கொரோனா சடலங்களைச் சேமித்து வைக்க குளிர்சாதன வசதி கொண்ட இரண்டு கண்டெய்னர்களை வாங்கியுள்ளோம். அடையாளம் தெரியாத காரணங்களால் உயிரிழந்தவர்களின் உடலில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களில் 20% பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆக முடிவு வந்துள்ளது. இது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டெய்னரில் கொரோனா சடலங்கள்
இந்த கொரோனா அலையால் மருத்துவமனைகளில் உள்ள பிண அறைகள் நிரம்பியுள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி சமயத்தில் கண்டெய்னர்களில் சடலங்களைச் சேமித்தோம். இப்போது கொரோனாவால் மீண்டும் கண்டெய்னர்களில் உடல்களைச் சேமிக்கத் தொடங்கியுள்ளோம். ஒரு கண்டெய்னரில் பல சடலங்களைச் சேமித்து வைத்துள்ளோம். உறவினர்கள் வந்து கேட்கும்போது சடலங்களை அளிக்கிறோம்.
Recommended Video

வேதனை
இங்குச் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலரும் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு உதவ முடியவில்லை என்பது தான் எங்களுக்கு அதிக சோகத்தைத் தருகிறது" என்று அவர் தெரிவித்தார். டெல்டா கொரோனா இப்போது பல்வேறு நாடுகளிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த டெல்டா கொரோனா சின்னம்மைக்கு இணையாகப் பரவுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமெரிக்கா ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையில் கொரோனா வேக்சின் 2 டோஸை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் கூட வேக்சின் போடாத மக்களுக்கு இணையாக டெல்டா கொரோனாவை பரப்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா கொரோனா மற்ற கொரோனா வகைகளை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல மெர்ஸ், சார்ஸ், எபோலா, சளி, காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற வைரஸ்களை விட டெல்டா கொரோனா வேகமாகப் பரவுகிறது. சின்னம்மை நோய்க்கு ஈடாக டெல்டா கொரோனாவும் வேகமாகப் பரவுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications