ஈராக் பிரச்சினையில் திடீர் திருப்பம்... ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குள் மோதல் : 17 பேர் பலி
பாக்தாத்: ஈராக் உள்நாட்டுப் போரில் புதிய திருப்பமான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குளேயே மோதல் உண்டாகியுள்ளதாகவும், அதில் பலர் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக்கை ரத்தக் களறியாக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடயே திடீர் மோதல் வெடித்துள்ளது. அவர்களுக்குள் சண்டை மூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் இரு குழுக்களுக்கிடையே கிர்குக் நகரில் நடந்த சண்டையில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள பல நகரங்களிலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர்களுக்கு நிறைய லாபங்கள் கிடைத்துள்ளன. மேலும் சிரியாவை இணைக்கும் முக்கியப் பகுதியில் அவர்கள் கை ஓங்கியுள்ளது. இந்த நிலையில்தான் அவர்களுக்குள் தற்போது மோதல் மூண்டுள்ளது.
ராணுவத் தகவல்...
கிர்குக் நகரில் இரு பிரிவுகளுக்கிடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. ஆக்ரோஷமாக நடந்த இந்த சண்டையில் 17 பேர் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 பேர் பலி...
இதற்கிடையே பாக்தாத்தில் ஷியா பகுதியான சபரனியா என்ற இடத்தில் மார்க்கெட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 4 கடைக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
சன்னி பிரிவு...
அதே இடத்தில் 3 மணி நேரம் கழித்து கை விலங்கிடப்பட்ட நிலையில் 2 பேர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
84 உடல்கள்...
திக்ரித் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 84 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. இவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸார், ராணுவத்தினர், அரசு ஊழியர்கள் ஆவர். அனைவரையும் தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்றுள்ளனர்.
பிளவு...
கிர்குக் நகரில் தீவிரவாதிகளுக்கிடையே நடந்த மோதலால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கிடையே பிளவு ஏற்படலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
புடின் ஆதரவு :
இதற்கிடையே தீவிரவாதிகளை சமாளிக்க முடியாமல் போராடி வரும் ஈராக் பிரதமர் நூர் அல் மாலிக்கியை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் தொடர்பு கொண்டு பேசி, ஆதரவு தெரிவித்துள்ளார். ஈராக் அரசுக்கு, ரஷ்யா முழு ஆதரவு தரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக ரஷ்யாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.