சோமாலியாவில், ஹோட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கி சூடு.. 14 பேர் பரிதாப சாவு
மொகதிசு: சோமாலியாவில், ஹோட்டல் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசு நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நுழைவாயில் மீது நேற்று மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தால் மோதினான். அதனால் எழுந்த குழப்பத்தை பயன்படுத்தி, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சிலர் ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
உள்ளே சென்ற தீவிரவாதிகள், அங்கு தங்கி இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
பிணைக்கைதிகள்
பாதுகாப்பு படையினர் வந்ததும், தீவிரவாதிகள், அங்கு தங்கி இருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளையும் வீசினர்.
14 பேர் சாவு
மோதலில் பாதுகாப்பு படை வீரர், பொதுமக்கள் என மொத்தம் 14 பேர் பலியானார்கள், 12க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளிடம் இருந்து ஹோட்டலை மீட்டுள்ளனர். கடைசி தீவிரவாதியையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
எம்.பிக்கள் கொலை
சோமாலியாவில் மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் அரசு செயல்பட்டு வருவதாக கூறி அதை கலைக்க வேண்டும் என்பதற்காக, அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தொடர்ந்து கொலை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் இதேபோல ஒரு ஹோட்டலில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி இரு நாடாளுமன்ற எம்.பிக்கள் உட்பட 15 பேரை கொன்று குவித்தனர்.
தப்பியோடிய நபர்கள்
நேற்றைய, துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த அலி முகமது கூறுகையில், இலக்கு இன்றி அனைவருக்கு எதிராகவும் துப்பாக்கியால் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதை பார்க்க முடிந்தது. நான் பின் கதவு வழியாக தப்பியோடிவிட்டேன் என்றார்.
ஆம்புலன்சில் பாதுகாப்பு
ஆம்புலன்ஸ் டிரைவர் யூசுப் அலி கூறுகையில், ஹோட்டலில் காயமடைந்திருந்த 11 பேரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தேன் என்றார்.
ரத்தம் பார்த்தும் பயமில்லை
தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் வந்ததும், அல்லாகு அக்பர் என கத்திக்கொண்டே, கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், தான் பின்வாசல் வழியாக வெளியே ஓடி தப்பியதாகவும் பெயர் தெரிவிக்க அஞ்சிய ஹோட்டல் ஊழியர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சாவையும், ரத்தத்தையும் பார்த்து நடுங்காத பிசாசுகள் போல அவர்கள் இருந்தனர் எனவும், அந்த நபர் கூறியுள்ளார்.