ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வரை பரவிய "அம்மா" புகழ்... ஜெயலலிதாவுக்குப் பாராட்டு!
அடிலைட்: ஆஸ்திரேலிய நாட்டு நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசியுள்ளனர்.
மெட் வில்லியம்ஸ் என்ற எம்.பி.தான் ஜெயலலிதாவைப் பாராட்டி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார் அவர்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடிலைட் தமிழ்ச் சங்கத் தலைவர் லாரன்ஸ் அண்ணாதுரை ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தங்களின் தலைமையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்படுவது குறித்து மகிழ்ச்சி. அதிலும் தமிழ் வளர்ச்சித் துறை தமது பணியை உலகளவில் நீட்டித்து எங்களின் அடிலெய்டு தமிழ்ச்சங்கம் வரை புது உறவை ஏற்படுத்தி மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் புதுவித நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
உங்கள் ஆசியோடு மார்ச் 27-ந்தேதி அடிலெய்டு நகரில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியான மயக்கும் மண்வாசனை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மந்திரிகள், மேயர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழர்களின் பண்பாட்டு கலைகளின் சிறப்பை உணர்ந்து மகிழ்ந்தார்கள் என்பது உண்மை. மேலும் தமிழர்களின் கலைகளை வெகுவாக பாராட்டினார்கள்.
இந்த கலை நிகழ்ச்சியின் மூலமாக தெற்கு ஆஸ்திரேலிய தமிழ் மக்களாகிய எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற கலைஞர்கள் ஏற்படுத்தி சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை எங்களுக்காக வழங்கிய உங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட் வில்லியம்ஸ் தனது நாடாளுமன்றப் பேச்சின்போது, அடிலைய்ட் தமிழ்ச்சங்க செயல்பாடுகள் மற்றும் 2 நாள் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கு ஆகியவை பாராட்டத்தக்கது. தமிழுக்கும், தமிழ் கலாசாரம் மற்றும் கலைகளுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிவரும் சிறந்த சேவைகள் சிறப்பானது என்று பேசினார்.