சவுதியில் நடந்த மாபெரும் பாபர் மசூதி நினைவு நாள் கருத்தரங்கம்!
சவுதி: சவுதி அரேபியாவில் கடந்த 6ம் தேதி பாபர் மசூதி நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
கடந்த 6ம் தேதி மாலை பாபர் மசூதி நினைவு நாள் கருத்தரங்கம் இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) அல்ஹஸ்ஸா கிளை சார்பில் நடைபெற்றது. அல்ஹஸ்ஸா மண்டல தலைவர் முத்துபேட்டை யூசுப்கான் வரவேற்று பேசினார். கிழக்கு மாகாண தமிழ் மாநில ஐ.எஸ்.எப். துணைத்தலைவர் காயல் அபூபக்கர் பாபர் மசூதி கருத்தரங்கம் ஏன்? என்று விளக்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பாபர் மசூதியும் முஸ்லிம்களின் கடமையும் என்ற தலைப்பில் கிழக்கு மாகாண ஐ.எஸ்.எப். தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதன் எதிரொலியாக அண்டை நாடான பாகிஸ்தானிலும் ஒருசிலஇந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.
சிறுபான்மை மக்களின் இந்து கோவில்கள் உடனடியாக புதுப்பித்து தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்த பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சொன்னதை போல் கோவிலை புதுப்பித்து கொடுத்தனர்.
அதன் திறப்பு விழாவிற்கு பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சென்றதை தற்போதைய மோடி அரசு நினைவில் கொண்டு இந்திய சிறுபான்மை சமுதாயத்தவரின் பாபர் மசூதியையும் உடனடியாக கட்டி கொடுத்து நாட்டின் இறையாண்மையை காப்பாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
அல்ஹஸ்ஸாவில் ஐ.எஸ்.எப். ஆற்றிவரும் சமூக நலப்பணிகளை மண்டல செயலாளர் சலீம் விளக்கினார். அல்ஹஸ்ஸா இஸ்லாமிய சென்டரின் தமிழ் பிரிவு தாஃவா நிர்வாகி இலங்கையை சேர்ந்த ஷப்ராஸ் மவ்லவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநில நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹஸ்ஸா ஐ.எஸ்.எப். கிளை தலைவர் நாசர் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவுபெற்றது.