வங்கதேச 'இனப்படுகொலை' போர்க்குற்றவாளி அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்!!
வங்கதேச விடுதலைப் போர் 1971-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து கொண்டு அந்நாட்டில் இனப்படுகொலையை நிகழ்த்தப்பட்டது. இதில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் முல்லா முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்கு பல ஆண்டுகாலம் நடைபெற்றது. அவர் டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கீழ் நீதிமன்றம் முதலில் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
அவரது தூக்குத்தண்டனை செவ்வாய்க்கிழமையன்று நிறைவேற இருந்த நேரத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் திடீரென இடைக்கால தடை விதித்தது. பின்னர் மீண்டும் முல்லாவின் தூக்கு தொடர்பான விவாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இறுதியில் முல்லாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து டாக்கா சிறையில் நேற்று இரவு 10 மணியளவில் முல்லா தூக்கிலிடப்பட்டார்.
முல்லா தூக்கிலிடப்பட்டதை ஆதரித்தும் எதிர்த்தும் ஊர்வலங்கள் டாக்காவில் நடைபெற்று வருகின்றன. இதனால் பல இடங்களில் வரலாறு காணாத வன்முறை அங்கு நடைபெற்று வருகின்றன.