சீனாவின் ஜின்ஜியாங்கில் முஸ்லீம் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் நோன்பு இருக்க தடை
பெய்ஜிங்: சீனாவின் ஜிங்ஜியாங் பகுதியில் வசிக்கும் முஸ்லீம் அரசு அதிகாரிகள், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க தடை வித்து அரசு இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திகத்தை பின்பற்றுகிறது. இந்நிலையில் சீன அரசு சிறுபான்மையினரான உய்குர் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் நகரில் நோன்பு இருக்க பல ஆண்டுகளாக தடை விதித்துள்ளது. ஜின்ஜியாங்கில் உய்குர் மக்களுக்கும், மாநில பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல்கள் ஏற்படும்.
இந்நிலையில் உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம்கள் மீது அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் தான் பிரச்சனைகள் ஏற்படுவதாக வலதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இணையதளங்கள்
கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு துறைகள் தங்களின் இணையதளங்களில் முஸ்லீம்கள் நோன்பு வைக்க தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. டர்பான் நகர வியாபார விவகாரத்துறையின் இணையதளத்தில் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருப்பதாவது, அரசு அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் நோன்பு இருக்கவோ, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளது.
நோன்பு
ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் யாரும் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கக் கூடாது என்று காரகாஸ் கவுன்ட்டியில் உள்ள வானிலை மையம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.
தடை
அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளம் வயதினர் ரமலான் நோன்பு இருக்க தடை விதிக்கப்படுகிறது என்று அரசு நடத்தும் போசோ ரேடியோ மற்றும் டிவி பல்கலைக்கழக இணையதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம்
அரசு ஊழியர்களின் உடல் நலத்தை காக்க தான் இவ்வாறு நோன்பு இருக்க தடைவிதிக்கப்படுவதாக அரசு முன்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு
அரசு அதிகாரிகள் உய்குர் மக்கள் ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உணவு சாப்பிட ஊக்குவிப்பதுடன் யாராவது நோன்பு இருக்கிறார்களா என்று வீடு வீடாக சென்று சோதனை இடுகிறார்கள்.