ஜிம்பாப்வேயில் எரிபொருள் நிரப்ப வந்த சரக்கு விமானத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்
ஹராரே: ஜெர்மனியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற சரக்கு விமானம் ஜிம்பாப்வேயில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டபோது அதில் ஒருவர் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வெஸ்டர்ன் குளோபல் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் ஒன்று ஜெர்மனியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கிளம்பியது. விமானத்தில் தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல மில்லியன் தென்னாப்பிரிக்க ராண்ட்(தென்னாப்பிரிக்க பணம்) இருந்தது. ஒரு மில்லியன் ராண்ட் ரூ.30 லட்சம் ஆகும்.
விமானத்தில் 2 அமெரிக்கர்கள், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் சிப்பந்திகளாக இருந்தனர். இந்நிலையில் விமானம் எரிபொருள் நிரப்ப ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அப்போது விமானத்தில் இருந்து ரத்தம் சொட்டியதை ஜிம்பாப்வே அதிகாரிகள் பார்த்தனர். விமானத்தினுள் பார்த்தபோது யாரோ ஒருவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அந்த நபர் யார், அவர் எப்படி விமானத்திற்குள் வந்தார் என்பது சிப்பந்திகளுக்கு தெரியவில்லை.
இதையடுத்து ஜிம்பாப்வே அதிகாரிகள் விமானத்தை தங்கள் காவலில் எடுத்தனர். போலீசார் விமானத்தில் இறந்து கிடந்தவர் யார், அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.