ஆப்கன் மசூதி அருகே அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 8 பேர் உடல் சிதறி பலி.. ஐஎஸ் அமைப்பு ‛அட்டாக்’
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குடியிருப்பு பகுதியில் மசூதி அருகே திரண்டிருந்த ஹசாரஸ் இன பெண்கள், குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பிய நிலையில் உள்நாட்டு போர் நடந்தது.
இதில் வெற்றி பெற்று 2021 ஆகஸ்டில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். உள்நாட்டு போர் மூலம் அவர்கள் ஆட்சியை பிடித்ததால் உலக நாடுகள் தாலிபான் அரசுக்கு ஆதரவு தெரிவிக்காமல் உள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெடித்து சிதறிய குண்டுகள்
இது ஒருபுறம் இருக்க கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது மக்களை இன்னும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சியா குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

8 பேர் உடல் சிதறி பலி
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உடல் சிதறி இறந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு காபூல் பகுதியில் உள்ள சியா குடியிருப்பு பகுதியில் உள்ள மசூதி அருகே திரண்டிருந்த பெண்கள், குழந்தைகளை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

ஐஎஸ் தீவிராதிகள் பொறுப்பேற்பு
இங்கு ஹசாரஸ் இன மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தீவிரவாத அமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளது. தாலிபான்களை அங்கீகரிக்க உலக நாடுகள் மறுத்து வரும் நிலையில் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) உள்ளிட்ட அமைப்புகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு தடை விதித்துள்ளன. இதனால் அங்கு வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் நிலையில் தான் அவ்வப்போது தீவிரவாத அமைப்புகளால் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

தொடரும் குண்டுவெடிப்புகள்
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 33 பேர் இறந்தனர். அதன்பிறகு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் புகழ்பெற்ற கார்டே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் ஒரு சீக்கியர் உள்பட 2 பேர் கொல்லப்பட்ட நிலையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் வரை பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications