வெள்ளிக்கிழமை நடக்கும் முகமது அலியின் இறுதிச் சடங்கு: பில் கிளிண்டன் பங்கேற்கிறார்
கென்டுக்கி: குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் இறுதிச் சடங்கு வரும் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் நடைபெறுகிறது. இறுதிச் சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கலந்து கொள்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி உடல்நலக்குறைவு காரணமாக அரிசோனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.
74 வயதில் மரணம் அடைந்த அவரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
அலி வளர்ந்து நடந்த தெருக்கள் வழியாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது.
அலியின் இறுதிச் சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கலந்து கொண்டு பேசுகிறார். அலியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் லூயிஸ்வில்லியில் நேற்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு அலியின் உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
18 வயதில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றவர் அலி என்பது குறிப்பிடத்தக்கது.