செத்துப் போன தாத்தாவுடன் செல்ஃபி... சர்ச்சையில் சிக்கிய சவுதி சிறுவன்!
ரியாத்: சவுதி அரேபியாவில் மருத்துவமனை வளாகத்தில் தாத்தாவின் சடலத்துடன் சிறுவன் ஒருவன் செல்ஃபி எடுத்து, அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் மூலம் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் செல்ஃபி மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும், வித்தியாசமான செல்ஃபிக்களுக்கு சமூகவலைதளங்களில் அதிக லைக்குகள் கிடைப்பதும் இதற்கு முக்கிய காரணம்.
அந்தவகையில், சவுதி அரேபியாவில் சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளான். மருத்துவமனை வளாகத்தில், கட்டிலில் சடலம் இருக்கையில், அதன் அருகில் நாக்கை வெளியில் நீட்டியவாறு அந்த செல்ஃபி எடுக்கப் பட்டுள்ளது.
கூடவே, தனது தாத்தாவிற்கு பிரியா விடை கொடுப்பதாகக் கூறும் வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. தாத்தாவின் பிரிவைப் பற்றி சிறிதும் கவலை இல்லாதது போலவும் சிறுவனின் செல்ஃபி மோகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அந்த புகைப்படம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, சடலத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என சவுதி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதினாவை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் இந்த புகைபடத்தை ஆதாரமாக வைத்து எந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து இந்த செல்ஃபி எடுக்கபட்டது என விசாரித்து வருகின்றனர் என மதினா பகுதி தலைமை செய்தி தொடர்பாளர் அப்துல் ரசாக் ஹப்டா தெரிவித்துள்ளார்.