இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலையை நிறுவ அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியன் ஹாக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அமைதி, சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகியவற்றை வாழ்கை நடைமுறையாக்கியதற்காக இந்திய தேசப்பிதா மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் சிலை வைக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் நிருபர்களிடம் கூறியதாவது: 20வது நூற்றாண்டின் மிகப்பெரிய தலைவர் மகாத்மா காந்தி. அமைதி, சகிப்புத்தன்மை போன்ற காந்தியின் போதனைகள், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவராலும் போற்றப்படுகிறது. அவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைப்பது என்பது கவுரவம்மிக்க பணியாகும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பிரிட்டீஷாருக்கு எதிராக கடுமையாக போராடிய காந்திக்கு அந்த நாட்டு அரசே கவுரவம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.