லடாக் மோதலில் எங்கள் வீரர்கள் கொல்லப்பட்டது உண்மை- எண்ணிக்கை குறைவு- சீனா அரசு ஊடகம் ஒப்புதல்!
பெய்ஜிங்: லடாக் கிழக்குப் பகுதியில் இந்தியா ராணுவத்துடனான மோதலில் சீனா வீரர்கள் கொல்லப்பட்டதும் உண்மைதான்; ஆனால் இந்தியா தெரிவித்திருக்கும் எண்ணிக்கையைவிட குறைவுதான் என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.
லடாக் கிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
அப்போது நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 முதல் 60 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பு எண்ணிக்கையை அறிவிக்கவில்லை.
மாஸ்கோ பேச்சு முன்... லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே சரமாரி துப்பாக்கிச் சூடு!
நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அறிக்கை
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் லோக்சபா, ராஜ்யசபாவில் எல்லை மோதல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்தார். அதில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதை விவரித்தார்.
எல்லையில் பதிலடி
மேலும் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்; இந்திய வீரர்கள் உயிரைத் தியாகம் செய்த போதும் சீன ராணுவத்தினருக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியிருந்தனர் என ராஜ்நாத்சிங் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குதான் இப்போது சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கம் மூலம் பதில் அளித்திருக்கிறது.
உயிரிழப்பு உண்மைதான்
அதில், லடாக் மோதலில் சீனா வீரர்கள் உயிரிழந்தது உண்மைதான். ஆனால் சீனா வீரர்களின் மரண எண்ணிக்கை இந்தியா சொல்வதைப் போல இல்லை. அதைவிட குறைவுதான் என முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
சரண் அடையவில்லை
அத்துடன், இந்திய ராணுவ வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் உயிரிழந்தனர். இந்திய வீரர்கள், சீனாவிடம் சரணடைந்தனர்; ஆனால் இந்திய ராணுவத்திடம் சீன வீரர்கள் ஒருவர்கூட சரணடையவில்லை என்றும் அந்த தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.