சீனாவில் 458 பேருடன் சென்ற கப்பல் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: பயணிகளின் நிலை என்ன?
பெய்ஜிங்: சீனாவில் 458 பேருடன் சென்ற கப்பல் சூறாவளிக் காற்றில் சிக்கி யான்ட்சே ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
சீனாவின் தென் பகுதியில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் ஈஸ்டர்ன் ஸ்டார் என்ற கப்பலில் 458 பேர் யான்ட்சே ஆற்றில் பயணம் செய்துள்ளனர். அழகிற்கு பெயர்போன யான்ட்சே ஆற்றில் விடுமுறையை கழிக்க பலர் கப்பலில் பயணம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் ஈஸ்டர்ன் ஸ்டார் கப்பல் சூறாவளிக் காற்றில் சிக்கி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த நூற்றுக்கணக்கானோரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. படகில் இருந்த சிலர் நீந்தி கரை சேர்ந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசாரும், ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 20 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் ஆற்றில் மூழ்கியவர்களை கண்டுபிடிக்க சிறு படகுகளில் ராணுவ வீரர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.