ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு டெக்னாலஜியில் 'முன்னேறிவிட்ட' பாக். தீவிரவாதிகள்!
இஸ்லாமாபாத்: வெளிநாட்டு தூதுவர்கள் சென்ற ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தானின் தெரிக்-இ-தாலிபான்கள் தாக்குதல் யுக்தியிலும், ஆயுத பலத்திலும் ஒரு படி மேலே ஏறிவிட்டதாக சர்வதேச ராணுவ மற்றும் பாதுகாப்பு பார்வையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
வடக்கு பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் மீது இன்று தெரிக்-இ-தாலிபான்கள் நடத்திய தாக்குதலில், நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் சேர்த்து மொத்தம் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கான நேரடி எச்சரிக்கையாக #பார்க்கப்படுகிறது. தெரிக்-இ-தாலிபான்கள் தங்கள் மீது பாகிஸ்தான் அரசு சமீபகாலமாக எடுத்துவரும் தீவிர ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து இப்படி ஒரு எச்சரிக்கையைவிடுத்திருக்கலாம் என்று ராணுவ பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், வெளிநாட்டு தூதர்களை எளிதாக கொலை செய்யும் அளவுக்கு பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு பலவீனமாக உள்ளதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
இந்த தாக்குதலில் சர்வதேச சமூகம் பயப்படும் ஒருவிஷயம் என்னவென்றால், ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் ஆயுத பலம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தெரிக்-இ-தாலிபான்கள் பெற்றுள்ளனர் என்பதுதான்.
மேலும், வெளிநாட்டு முக்கியஸ்தர்களுக்கே பாதுகாப்பு தர முடியாத பாகிஸ்தான் அரசு, சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்கப்போகிறது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.