சீனாவில் உக்கிரமாகும் கொரோனா.. தினசரி பாதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகரிப்பு! லாக்டவுன் அமல்
பீஜிங்: சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பல ஆயிரம் பேர் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் 2019ம் ஆண்டு முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகமெங்கும் பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா.
பங்குனி மாத ராசி பலன்கள் 2022 : இந்த 6 ராசிக்காரர்களில் யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தெரியுமா?
இந்த வைரஸால் ஒட்டுமொத்த உலகமுமே ஊரடங்கில் இருந்தது. எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு கொரோனாவின் பாதிப்புகள் இருந்தன. ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, கொரோனாவால் பலர் உயிரிழந்தனர்.
கொரோனா
கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்த நேரத்தில், சீனாவில் கொரோனாவின் தினசரி தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. தற்போது வடகிழக்கு சீனாவில் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பல ஆயிரம் பேர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சீனா, கொரோனா தாக்கம் அதிகமுள்ள இடத்தில் ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
சாங்சுன்
சீனாவின் சாங்சுன் மாகாணத்தில் 90 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.
தொற்று
கொரோனா தொற்று அதிகரிப்பதை அடுத்து கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 255 பேர் பலியாகி உள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 194 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
பொருளாதார பாதிப்பு
கடந்த மூன்று வாரங்களுக்கு முன் தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் இருந்தது. ஆனால் தற்போது ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கையே தீர்வாக வைத்திருக்கிறது சீன அரசு. மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயமும் ஏற்பட்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.