ஏர் ஏசியா விதிமீறல் தான் விபத்திற்கு காரணமா?: கசிந்த முக்கிய ஆவணம்
ஜகர்தா: ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 டேக் ஆப் ஆகும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 28ம் தேதி 162 பேருடன் இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிய ஏர் ஏசியா விமானம் க்யூஇசட் 8501 விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. ஜாவா கடலில் இருந்து இதுவரை 31 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தோனேசிய அதிகாரி ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பிய ஆவண தகவல் கசிந்துள்ளது.
வானிலை அறிக்கை
ஏர்ஏசியா விமானம் கிளம்பும் முன்பு விமானிகளுக்கு வானிலை அறிக்கை அளிக்கப்படவில்லை. ஏர் ஏசியாவுக்கு காலை 7 மணிக்கு தான் வானிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் அதிகாலை 5.33 மணிக்கு எல்லாம் கிளம்பிவிட்டது.
ஆவணங்கள்
வானிலை அறிக்கை குறித்த தகவல் இந்தோனேசியா வானிலை மைய அதிகாரி அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் இக்னேஷியஸ் ஜோனானுக்கு அனுப்பிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவண தகவல் கசிந்து தான் தற்போது உண்மை தெரிய வந்துள்ளது.
விதிமீறல்
ஏர்ஏசியா இந்தோனேசியா பிரிவின் விதிமீறலால் தான் விமானம் விபத்துக்குள்ளானது என்று இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அது எப்படி
ஒவ்வொரு முறையும் விமானத்தை டேக் ஆப் செய்ய 10 நிமிடங்களுக்கு முன்பு வானிலை அறிக்கையை விமானி நிச்சயம் பெற வேண்டும். அப்படி இருக்கையில் ஏர்ஏசியா விமானி வானிலை அறிக்கையை பெறாமலேயே எப்படி விமானத்தை எடுத்தார் என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மறுப்பு
வானிலை அறிக்கை பெறாமல் விமானத்தை எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏர்ஏசியா இந்தோனேசிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.