சிரியாவில் ரஷ்யாவுடன் கைகோர்த்து களமிறங்கிய கியூபா ராணுவ தளபதிகள்
டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுடன் கியூபா ராணுவ தளபதிகள், வீரர்களும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியாவில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு எதிராக ப்ரீ சிரியா ஆர்மி என்ற இயக்கம் உள்நாட்டு யுத்தம் நடத்தி வருகிறது. அத்துடன் அல் நுஸார் முன்னணி, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களும் சிரியா ராணுவத்திடம் இருந்து பல பகுதிகளைக் கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளன.

இதில் ப்ரீ சிரியா ஆர்மிக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளித்து வருகிறது. அதே நேரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தனது நட்புநாடுகளுடன் இணைந்து வான்வழித் தாக்குதல்களையும் அமெரிக்கா நடத்தி வருகிறது.
இந்நிலையில் சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா திடீரென களமிறங்கியது. ரஷ்யா கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக சிரியாவில் உக்கிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யாவைப் பொறுத்தவரை அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சி குழு மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு தரப்பையுமே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது அமெரிக்காவை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
வான்வழித் தாக்குதல்களுடன் காஸ்பியன் கடற்பரப்பில் இருந்து ஏவுகணைத் தாக்குதலையும் ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டு சிரியா ராணுவம் பல நகரங்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா ராணுவத்தினருடன் கியூபா ராணுவ வீரர்களும் சிரியாவில் களமிறங்கியுள்ளனர். கியூபாவுக்கு நீண்ட காலமாக ராணுவ உதவி மற்றும் பயிற்சியை ரஷ்யா அளித்து வருகிறது. இதனால் சிரியாவில் களமிறக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் ராணுவதளவாடங்களை இயக்குவதற்கு கியூபா ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
ஏற்கெனவே ரஷ்யாவுக்கு ஆதரவாக சிரியாவுக்குள் நுழைய ஈரான் ராணுவ வீரர்கள் காத்திருக்கும் நிலையில் கியூபா ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications