கண்ணீர் விடும் பிரதமர்கள்: கடன் கொடுத்து நாட்டையே அடித்து பிடுங்கும் சீனா- தவிக்கும் குட்டி தேசங்கள்
பெய்ஜிங்: உலக நாடுகளை எல்லாம் எப்படியாவது தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் சீனா விடாப்பிடியாக முயன்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தென் சீன கடல் எல்லை மோதல், ஆசிய நாடுகளுடன் எல்லை பிரச்சனை, இலங்கை, ஆப்கான், பாக் போன்ற நாடுகள் மீதான கட்டுப்பாடு என்று சீனா முஷ்டி முறுக்கிக்கொண்டு இருக்கிறது.
Recommended Video
இன்னொரு பக்கம் அமெரிக்காவுடன் நேரடியாக வர்த்தக மோதல், ஜி 7 நாடுகளுடன் வாக்கு வாதம் என்று சீனா சர்வதேச அளவில் வல்லரசுகளை எல்லாம் மோதி எப்படியாவது ஒற்றை பேரரசாக இருக்க வேண்டும் என்று சீனா முயன்று கொண்டு இருக்கிறது. 2049ல் சீனாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு முன் இந்த சாதனையை படைக்க அந்த நாடு முயன்று வருகிறது.
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!
தற்போது கொரோனா பரவல் உள்ளிட்ட பல விஷயங்கள் சீனாவின் இந்த பேரரசு திட்டத்தோடு தொடர்பு படுத்தப்பட்டாலும் அதற்கு வெளிப்படையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கொரோனா பரவலுக்கும் சீனாவின் இந்த பேரரசு ஆசைக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சீனா வேறு ஒரு வகையில் உலகின் பல நாடுகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் கட்டுப்படுத்த தொடங்கி உள்ளது.
கட்டுப்பாடு
எப்படி ஒரு கந்து வட்டி கடன்காரன் கடன் கொடுத்துவிட்டு வட்டி மேல் வட்டி போட்டு.. கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றதும் உடனே வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்வானோ அப்படித்தான் சீனாவும் மொத்த உலகத்தின் கந்துவட்டிகாரன் போல செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு சீனா வைத்து இருக்கும் வசீகரமான பெயர்தான் "debt trap diplomacy". அதாவது பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகளை கடனில் சிக்க வைக்கும் ராஜதந்திரம். ஒன்றுமில்லை ஏழை நாடுகளிடம் வளர்ச்சி திட்டங்களுக்கு கடன் கொடுப்பது.. பல திட்டங்களை கடனுக்கு கொண்டு வருவது,, பின்னர் அந்த நாடுகள் கட்ட முடியாமல் தவிக்கும் போது அவர்களிடம் இருந்து முக்கிய சொத்துக்களை வாங்குவது அல்லது அந்த நாட்டையே மறைமுகமாக கட்டுப்படுத்துவது.
சீனா சிக்கல்
மாண்டினீக்ரோ என்ற குட்டி நாட்டின் சாலை திட்டம் குறித்து பலரும் சமீபத்தில் படித்திருக்க வாய்ப்பு உள்ளது. சீனாவிடம் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் கீழ் சாலை பணிக்காக வாங்கிய கடனால் மாண்டினீக்ரோ என்ற குட்டி நாடு பெரிய கடனில் மூழ்கி உள்ளது. நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பிற்கு இணையாக தற்போது கடன் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு மூழ்கி உள்ளது. மாண்டினீக்ரோ நாட்டின் முந்தைய அரசு சீன நிறுவனம் ஒன்றின் உதவியோடு மிகப்பெரிய சாலை திட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அதன்படி சீனாவிடம் கடன் வாங்கி 270 மைல் தூரத்திற்கு பல்வேறு பாலங்கள் அடங்கிய நீண்ட சாலையை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது
கடன் எவ்வளவு
சீனாவின் ஸ்டேட் பேங்க் மூலம் 1 பில்லியன் டாலர் கடன் வாங்கியது மாண்டினீக்ரோ. இந்த கடனை அடைக்க முடியாமல்தான் தற்போது மாண்டினீக்ரோ நாடு விழி பிதுங்கி போய் உள்ளது. அந்த நாட்டின் மொத்த ஜிடிபியே 530 கோடி டாலர்தான். அவ்வளவு சின்னநாடு அது. ஆனால் மாண்டினீக்ரோ நாடு அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு சீனாவிடம் இருந்து 1 பில்லியன் டாலர் (ஜிடிபியில் 20 சதவிகிதம் ஒரே சாலைக்காக கடன்) கடன் வாங்கி உள்ளது.
கட்டாயம்
இதனால் தற்போது சீனா சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய கட்டாயம் அந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் முதலீடுகளை செய்து, முக்கிய அரசு துறைகளையும், நிலங்களையும் சீனா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பாகிஸ்தான் சீனாவிடம் கடன் வாங்கி பெரிய பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ராணுவம் புரட்சி செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்தன.
காரணம் என்ன?
இதற்கு காரணம் பாகிஸ்தானில் மக்கள் போராட்டமும், விலைவாசி உயர்வும். கடந்த 2 வருடத்தில் அந்நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. நாட்டில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் மக்கள் எதிர்ப்பையும், ராணுவம் கொடுக்கும் ஆதரவையும் வைத்துக்கொண்டு ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இம்ரான் கானின் அரசை தூக்கி அடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
என்ன நடந்தது
பாகிஸ்தான் சீனாவிடம் பல்வேறு திட்டங்களுக்காக 385 பில்லியன் டாலர் கடன் வாங்கியது. இது முழுக்க முழுக்க சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் கீழ் கட்டப்படும் சாலைகள், துறைமுகங்கள், பாலங்களுக்காக வாங்கப்பட்ட கடன். ஆனால் இதை அடைக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. கடந்த வருடம் மட்டும் 26 பில்லியன் ரூபாய் வட்டி மட்டும் கொடுத்துள்ளது. ஆனால் கடனை அடைக்க முடியாமல் சர்வதேச நிதியத்தின் கடன் வாங்கி அதுவும் கட்டுப்படியாகாமல் தற்போது சொந்த நாட்டு மக்களிடம் அதிக வரி விதிக்க தொடங்கி உள்ளது. அதோடு பாகிஸ்தானின் க்வாடார் துறைமுகத்தையும் சீனாவிற்கு இலவசமாக லீசுக்கு விட்டுள்ளது. இதுவே அந்நாட்டு விலைவாசி உயர்விற்கு காரணமாக உருவெடுத்துள்ளது.
கண்ணீர்
இது ஒருபக்கம் இருக்க 2015ல் சீனாவின் Export-Import Bank மூலம் 200 மில்லியன் டாலரை உகாண்டா கடனாக வாங்கியது. தங்கள் நாட்டில் உள்ள ஒரே விமான நிலைய விரிவாக்கத்திற்காக இந்த பணத்தை வாங்கியது. சர்வதேச விதிகள் சிலவற்றையே மீறி இந்த கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடனை திருப்பி கொடுக்காத காரணத்தால் உகாண்டா விமான நிலையத்தை சீனா கைப்பற்ற உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சீனா இதை ஏற்கனவே கைப்பற்றிவிட்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை. மாறாக இனிதான் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா
அதன்படி தற்போது உகாண்டா பிரதமர் யோவேரி முசவெனி சீனாவிற்கு இது தொடர்பாக தூதுவர்களை அனுப்பி உள்ளதாகவும், சீனாவின் ஆதிக்கத்தால் அவர் தொலைக்காட்சியில் கண்ணீர் விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவின் இதே "debt trap diplomacy" மூலம் சிக்கிய நாடுதான் லாவோஸ். குட்டி தேசமான இது சீனாவிடம் வாங்கிய 1.2 பில்லியன் டாலர் கடனை அடைக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு சேமிப்பே வெறும் 864 மில்லியன் டாலர்தான். அப்படி இருக்கும் போது லாவோஸ் சீனாவின் கடனை அடைக்க முடியும்.
கடன்
இதன் காரணமாக தற்போது அந்த நாட்டின் மொத்த பவர் கிரிட் சீனாவின் வசம் சென்றுள்ளது. கடனுக்கு பதிலாக இந்த பவர் கிரிட் சீனாவிடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் கட்டுப்பாட்டில் லாவோஸின் மொத்த மின் துறை உள்ளது. இதெல்லாம் போக தஜிகிஸ்தான் போன்ற நாடுகளும் கடனால் சிக்கி தவித்து வருகின்றன. அதேபோல் இலங்கையும் பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தில் கடன் வாங்கி மிக மோசமான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. இலங்கையின் பரிதாப நிலை எல்லோரும் அறிந்ததே!
இழப்பு
அந்த நாட்டில் கடன் நிதி சுமை ஏற்பட இதுவே காரணமாக அமைந்தது. ஆப்ரிக்க நாடுகள் பல சீனாவை எதிர்க்க முடியாமல் தங்கள் கடல் பகுதியில் சீனாவின் ராணுவம் போர் கப்பல்களை நிறுத்த அனுமதி வழங்கி வருகிறது. பணத்தை கொடுத்து நிலங்களையும், கடல் எல்லைகளையும் சீனா வாங்க தொடங்கி உள்ளது. உலக நாடுகளை இணைப்போம் என்று கூறி சீனா தொடங்கிய பெல்ட் அண்ட் ரோட் திட்டம்.. குட்டி தேசங்களை சீனாவின் காலுக்கு கீழ் கொண்டு வர தொடங்கி உள்ளது!