நிலநடுக்கம், சுனாமியிடம் சிக்கி சின்னாபின்னமாகும் இந்தோனேசியா!
சென்னை: இந்தோனேசியாவை மீண்டும் ஒரு சுனாமி தாக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தாக்கிய மிகப் பெரிய ஆசியன் சுனாமி தாக்குதல் ஏற்படுத்திய வடுவை உலக மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை.
இன்று தாக்கிய சுனாமியானது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் உயிரிழப்பும், சேதமும் ஏற்பட்டுள்ளது.
பூமியின் மிகவும் அபாயகரமான பகுதிகளில் ஒன்றாக இந்தோனேசியா திகழ்கிறது. அதிக அளவில் நிலநடுக்கங்களையும், சிறிய அளவிலான சுனாமிகளையும் சந்திக்கும் பகுதி இது. பசிபிக் அக்னி வளையப் பகுதியில் இது அமைந்துள்ளது. இங்குதான் உலகிலேயே அதிக அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
[இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி.. ஒருவர் பலி.. 10க்கும் மேற்பட்டோர் காயம்! ]
2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவுக்கு அருகே கடலில் ஏற்பட்ட மிகப் பயங்கரமான நிலநடுக்கமானது வரலாறு காணாத சுனாமி தாக்குதலை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 100 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் சுமத்ரா பெரும் சேதத்தை சந்தித்தது.
14 நாடுகளில் இந்த சுனாமி பெரும் உயிரிழப்புகளையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமி தாக்குதல் இது.
அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஜாவாவுக்கு அருகே யோக்யகார்த்தா என்ற பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 6000 பேர் உயிரிழந்தனர். 38,000 பேர் காயமடைந்தனர். 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். ஒன்றரை லட்சம் வீடுகள் சேதமடைந்தன.
அதற்கு முன்பு 2005ல் சுமத்ராவில் ஏற்பட்ட 8.7 ரிக்டர் நிலநடுக்கத்திற்கு 900 பேர் உயிரிழந்தனர். 6,000 பேர் காயமடைந்தனர்.