சரிவிகித உணவா அப்டினா என்ன? கேட்கிறார்களாம் இங்கிலாந்து மக்கள் – ஆய்வில் தகவல்
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் 4 இல் ஒருவர் ஒரு நாளில் தேவையான சரிவிகித உணவை கூட எடுத்து கொள்வதில்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
இங்கிலாந்து நாட்டில் வயதுக்கு வந்தவர்களில் லட்சக்கணக்கான பேர் தினந்தோறும் எடுத்து கொள்ள வேண்டிய உணவை உண்பதில்லை.
பதிலாக, சாக்லேட், கேக், பிஸ்கெட் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
சமைக்க நேரம் இல்லை:
இது குறித்து, இங்கிலாந்து சுகாதார ஆய்வு அறிக்கைக்காக கேள்வி கேட்கப்பட்டவர்களில் பலர் அளித்த பதில் ஆச்சரியம் தந்துள்ளது. அவர்களுக்கு சமையல் செய்வதற்கு நேரம் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களில் பாதி பேர், புதிதாக காய்கறிகள் அல்லது பழங்களை வாங்கவில்லை.
விலை அதிகம்:
ஏனெனில் அவை அதிக விலை மிக்கவை என கூறியுள்ளனர். அவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், உடலை கச்சிதமாக வைத்து கொள்வது குறித்து தாங்கள் அக்கறை கொள்வது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
உடல் எடை பராமரிப்பு:
அவர்களில் 3ல் ஒரு பங்கினர் அதிக குண்டான உடலமைப்பை கொண்டிருந்தாலும், அது அதிக உடல் எடை அல்ல என்றும் தாங்கள் நலமாகவே இருக்கிறோம் என்றும் கூறி கொள்வதுடன் சுகாதார பிரச்சனைகள் இருப்பதற்கான சாத்திய கூறுகளை புறந்தள்ளி விடுகின்றனர்.
தவறும் உடற்பயிற்சி:
இது குறித்து இங்கிலாந்து சுகாதார மருத்துவ இயக்குநரான டாக்டர் டக் ரைட் கூறும்போது, பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்நாளில் முறையான உடற்பயிற்சி மேற்கொள்வதில் தவறி விடுகின்றனர். நாட்டிலுள்ளவர்கள், உடலுக்கு நலம் தரும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவாக எடுத்து கொள்வதில்லை.
சாக்லெட்டுக்கு ஆப்பிள்:
இது ஒரு சாக்லேட்டுக்காக ஆப்பிளை விட்டு கொடுப்பது போன்றது. அதிக உடல் எடை சுகாதாரத்தை பாதிக்கும் காரணியாக இருக்கிறது. எனினும், தாங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறோம் என்று கூறி கொண்டு பெரும்பான்மையானவர்கள் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
நோய் அபாயம் அதிகம்:
உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் 2 ஆம் வகை நீரிழிவு நோய், இருதய நோய், ஸ்டிரோக் மற்றும் சில வகையான புற்றுநோய் ஆகிய தாக்கங்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார்.
மன அழுத்த பாதிப்பு:
கடந்த வருடம் அதிக எடை கொண்டவர்களில் 4 இல் ஒரு பங்கினர் உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை மற்றும் 5 இல் ஒரு பங்கினர் உடல் எடை தொடர்பான மனஅழுத்த பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து கொண்டுள்ளனர்.
கொழுப்பு சத்து அதிகம்:
ஆய்வுக்கு உட்பட்டோரில் 25 முதல் 34 வயதுடையோரில் 3ல் ஒரு பங்கினர் அதிக கொழுப்பு சத்து நிறைந்தவர்களாக இருந்துள்ளனர். இது 35-44 வயதுடையோரில் பாதிக்கும் அதிகமாக இருந்துள்ளது. 55 வயதை கடந்தவர்களில் 4ல் ஒரு பங்கினர் அதிக கொழுப்பு நிறைந்த உடல் பருமன் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.