அகஸ்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கு.. ஓர்ஸிக்கு விடுதலை
அகஸ்டா வெஸ்ட்லேன்ட் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பின் மெக்கானிக்கா முன்னாள் தலைவர் ஓர்ஸியை இத்தாலி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இத்தாலி: வி.ஐ.பி.க்களுக்கான 12 ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வதற்காக ரூ.362 கோடி லஞ்சம் தந்ததாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட 'பின் மெக்கானிக்கா' முன்னாள் தலைவரை வழக்கில் இருந்து இத்தாலி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி நீதிமனறத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பின் மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கியூஸெப்பி ஓர்ஸி கடந்த 2014-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கியூஸெப்பி ஓர்ஸி-க்கு நான்கரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பின் மேல்முறையீட்டில், கீழ்மை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கியூஸெப்பி ஓர்ஸி மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி புருனோ ஸ்பாக்னோலினி ஆகியோரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து இத்தாலி நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.