பிரான்ஸில் மசூதி, கபாப் கடையில் குண்டுவெடிப்பு: அதிர்ச்சியில் மக்கள்
பாரீஸ்: பிரான்ஸில் உள்ள லீ மான்ஸ் நகரில் இருக்கும் மசூதிக்குள் மர்ம நபர்கள் நான்கு வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒரு குண்டு வெடித்துச் சிதறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புதன்கிழமை புகுந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சயித் மற்றும் செரிப் குவாச்சி ஆகிய சகோதரர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நடந்த மறுநாளே மலகாப் பகுதியில் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பெண் போலீஸ்காரர் பலியானார். மேலும் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று கிழக்கு பிரான்ஸில் உள்ள வில்லாபிரான்ஸ் சர் சவோன் நகரில் மசூதிக்கு அருகே உள்ள கபாப் கடையில் குண்டு வெடித்தது. இதில் நல்ல வேளையாக யாரும் காயம் அடையவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே மேற்கு பிரான்ஸில் உள்ள லீ மான்ஸ் நகரில் உள்ள மசூதி ஒன்றுக்குள் மர்ம நபர்கள் 4 வெடிகுண்டுகளை வீசிச் சென்றனர். இதில் ஒரு குண்டு வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. இந்நிலையில் வெடிக்காத 3 குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த மசூதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கிச்சூடுகள், அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள் ஆகியவற்றால் பிரான்ஸ் மக்கள் பீதியில் உள்ளனர்.