மலேசியாவில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் காயம்
கோலாலம்பூர்: மலேசியாவில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 4 பேர் காயமடைந்தனர்.
கடும் மழை காரணமாக மலேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கெலாண்டன் பகுதி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 21 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்குள்ள சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். நிவாரணப் பொருட்கள் ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு செல்லப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
வெள்ளநீர் வடிந்து வரும் சூழலில் அப்பகுதி மக்கள் குடிதண்ணீர் மற்றும் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இதனால், தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டு வருகிறது.