திருமணத்தால் தீவிரவாதி ஆன பிரான்ஸின் 'மோஸ்ட் வாண்டட்' பெண்
பாரீஸ்: பிரான்ஸ் அரசால் தேடப்படும் ஹயாத் பவ்மெடின் என்ற பெண் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். அவர் மிகவும் ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாரீஸில் உள்ள மலகாப் பகுதியில் பெண் போலீஸ்காரரை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. அவருக்கும் சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.
அவரது கணவரால் தான் ஹயாத் பிரான்ஸால் தேடப்படும் நபராகிவிட்டார். பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர்மார்க்கெட்டுக்குள் புகுந்து சிலரை பிணையக் கைதியாக பிடித்த அமேதி கவ்லிபாலியை திருமணம் செய்த பிறகு தான் ஹயாத் ஜிஹாத் வழியில் சென்றுள்ளார்.
அமேதியை பிரான்ஸ் போலீசார் சுட்டுக் கொலை செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹயாத்
26 வயதாகும் ஹயாத் அமேதியை திருமணம் செய்த பிறகு தான் அவர் தீவிரவாத வழியில் சென்றுள்ளார். கேஷியராக வேலை செய்த போது தான் கவ்லிபாலியை சந்தித்துள்ளார் ஹயாத். கவ்லிபாலியின் ஜிஹாதி கொள்கைகள் ஹயாத்தை கவர்ந்துள்ளன. 2010ம் ஆண்டில் கவ்லிபாலிக்கும் போதைப்பொருள் உலகிற்கும் உள்ள தொடர்பு குறித்து போலீசார் ஹயாத்திடம் விசாரித்தனர். அப்போது அவரோ அமேதி தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆன்மீக புத்தகங்கள்
என் கணவர் என்னை பேசியே கவர்ந்தார். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் நடந்த படுகொலைகள் பற்றி என்னிடம் தெரிவித்தார். அப்போது உண்மையான தீவிரவாதிகள் யார் என்று நான் அவரிடம் கேட்டதற்கு அமெரிக்கர்கள் என்று அவர் கூறினார் என ஹயாத் பிரான்ஸ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது மதத்தை பாதுகாக்கவும், அப்பாவிகளின் கொலைக்கு பழிவாங்கவும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உள்ளது. நான் அமேதியை சந்தித்த பிறகு ஏராளமான ஆன்மீக புத்தகங்களை வாசித்தேன் என்று ஹயாத் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜிஹாத்
அமேதி சிறிய திருடராக வாழ்க்கையை துவங்கியுள்ளார். 17 வயதில் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார். அதன் பிறகு அவர் போதைப்பொருள் உலகில் நுழைந்துள்ளார். அவர் கடந்த 2002ம் ஆண்டு வங்கியை கொள்ளை அடித்துள்ளார். அவருக்கும் சார்லி ஹெப்டோ தாக்குதல் நடத்திய குவாச்சி சகோதரர்களுக்குமான தொடர்பு பற்றி தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பாரீஸில் அல் கொய்தா அமைப்புக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடந்தபோது அவர்கள் சந்தித்துள்ளனர்.
சிறை
செரிப் குவாச்சி மற்றும் அமேதி சிறையில் இருந்த போன்று அவர்களுக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்கொய்தா நடத்திய முகாமில் சேர முயன்றதற்காக செரிப் 18 மாதம் சிறையில் இருந்துள்ளார். அமேதி திருட்டு வழக்கு முதல் போதைப் பொருள் வழக்கு வரை பல வழக்குகளில் சிறை சென்றுள்ளார். அவர்கள் சிறையில் இருக்கையில் தான் மாறியுள்ளனர். அவர்கள் வெளியே வந்து நாட்டையே உலுக்கப் போவதை போலீசார் உணரவில்லை. அவர்கள் சிறையில் இருக்கையில் பல்வேறு தீவிரவாத அமைப்பினரும் இருந்துள்ளனர்.