பிரான்சில் முதலாளியின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்த தீவிரவாதி
பாரீஸ்: பிரான்சில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ரசாயன குடோன் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி தனது முதலாளியின் தலையை துண்டித்து அத்துடன் செல்பி எடுத்து அதை ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் உள்ள லியன் நகர் அருகே இருக்கும் செயின்ட் குவென்டின் பலாவியரில் உள்ள ரசாயன குடோனில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது தீவிரவாதி யாசின் சால்ஹி தனது முதலாளியான தொழில் அதிபர் ஹெர்வே கார்னராவை கழுத்தை நெறித்துக் கொலை செய்து அவரது தலையை துண்டித்துவிட்டார்.
தலையை துண்டித்த அவர் அத்துடன் செல்பி எடுத்து அதை கனடாவைச் சேர்ந்த செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாள் போலீசார் டிரக் டிரைவரான யாசின், அவரது மனைவி மற்றும் சகோதரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் யாசினுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது
யாசின் செல்பியை அனுப்பி வைத்த செல்போன் எண்ணை வைத்திருக்கும் நபர் தற்போது சிரியாவில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடோனில் நடந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலையை துண்டித்து வேலியில் தொங்க விட்டது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்வதை போன்றே உள்ளது.
புனித ரமலான் மாதத்தில் கூடுதலாக தாக்குதல் நடத்துமாறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அழைப்பு விடுத்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.